"தொட்டுப் பார்!" என்றது அக்குரல் மறுபடியும்.
நன்னய பட்டன் அணுகினான்.
பலிபீடத்தின் மீதிருந்த உருவத்தைத் தொட்டான்!
என்ன ஆச்சரியம்! வெறும் களிமண், சதைக் கோளமாக மாறிவிட்டது!
"அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவ ரசத்தைத் தடவு!"
நன்னய பட்டன் அப்படியே செய்தான்.
மறுபடியும் ஏற்பட்டது மின்னலும் இடியும்.
"உணர்வு ஏற்பட்டுவிட்டது. தொட்டுப் பார்! இதயம் அடித்துக் கொள்ளும். இனி உயிர்தான் பாக்கி! குழந்தையை அவன் முகத்தில் படுக்க வை!"
நன்னய பட்டன் அப்படியே செய்தான். இதற்குள் அவனது கோர உருவத்தில் செம்பாதி மறைந்துவிட்டது.
"முதலில் அந்த மூலையில் இருக்கும் மருந்தைக் கையில் தடவி, உருவத்தின் கைகளை உன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு முதலையின் முதுகில் நில்! ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு நான் சொன்னதுபோல் செய்!" என்றது அக்குரல்.
நன்னய பட்டன் யந்திரம் போல அவற்றைச் செய்து முடித்தான்.
"உருவத்தின் கண்களையே பார்! வேறு பக்கம் திரும்பாதே!"
மறுபடியும் இடிஇடிக்க ஆரம்பித்தது! கோர இடி, சமுத்திர அலை போல் தனது உள்ளுணர்வைத் தாக்கி உடலில் தங்கொணா வேகத்தில் புரளுவதை அறிந்தான். உருவத்தின் மீது வைத்த கண் மாறவில்லை. உருவத்தின் கண்கள் மெதுவாக அசைகின்றன. அதன் நெற்றியில் சிறு வியர்வை துளிர்க்கிறது. கண்கள் மெதுவாகத் திறக்கின்றன.
அச்சமயம் 'களுக்'கென்று பெண்ணின் சிரிப்புக் குரல்.
மறுபடியும் அதே உருவமா! பார்க்கவேண்டுமென்ற ஆசை மறுபடியும் அதன் உருவப் பிரமையில் சென்று லயித்தது. மெதுவாகக் கண்ணைத் திருப்பினான்.
அப்பேயுருவம் மெதுவாகப் பலிபீடத்தை அணுகி, சடையை எடுக்க முயன்றது. கட்டளையை மறந்து அதைத் தட்டக் கையெடுத்தான்!
"எடுக்காதே!" என்ற அதிகாரத் தொனியுள்ள குரல்! உருகிய பிழம்புகள் பாதங்கள் வழியாக இதயத்தை நோக்கிப் பாய்வது போல் ஒரு சிறு வினாடி நினைத்தான். அவ்வளவுதான்:
மற்றொரு பேரிடி! நீட்டின கையை மடக்க முடியவில்லை.
புதுமைப்பித்தன் கதைகள்
365