பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அந்த முட்டாள் பயல்கள், 'கொல்லப்படாது! பாவம் கீவம்' என்று சொல்லி, ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான் நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகிவிட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக் கூட எரிக்க முடியாது!" என்றது.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு சிறு முயல், அதன் காலில் இடறிப் பாய்ந்து பக்கத்துப் புதரைப் பார்த்துத் தாவியது.

"ஐயோ!" என்று கூவிக்கொண்டு, வேதாளம் வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டது.

ஓடியது ஒரு முயல்தான் என்று சொல்லி அதன் பயத்தைத் தெளிவித்தேன்.

"நாங்கள் தலைகீழாகத் தொங்கித் தொங்கிக் கால்களெல்லாம் பிரயோஜனமில்லாமல் போய்விட்டன. இந்தத் தலைகீழ் ராஜ்யம் வந்ததும் அந்தச் சமணர்கள் காலத்தில்தான்!" என்றது.

"எப்படி?" என்றேன்.

"அவர்கள் எல்லாம் மரத்திலே உறியைக் கட்டி, அதிலே உட்கார்ந்து கொண்டார்கள். ஜனங்களெல்லாரும் அந்தப் பக்கம் திரும்ப ஆரம்பிச்சா! நான் தான் அப்போ அதற்கு இந்த வழி பண்ணி மறுபடியும் எங்களைப் பார்த்துப் பயப்படும்படி செஞ்சேன்!" என்று அது கொஞ்சம் பெருமையடித்துக் கொண்டது.

பேசி பேசி அதற்குள் பழைய பாபநாசத்திற்கு வந்துவிட்டோம்.

மண்டபத்தருகில் நின்று ஒரு முருங்கை மரத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தட்டியது.

"உமக்கு உச்சினிபுரத்து வேதாளத்தைத் தெரியுமா?" என்றேன்.

"அந்த விக்கிரமாதித்தப் பயலைத் தூக்கிக்கொண்டு அலைந்தாரே, அவரா! அவர் என் அண்ணா பிள்ளை!" என்றது.

"இதோ ஒரு முருங்கை மரம் இருக்கிறதே, இதில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்! நான் வேண்டுமானால் தினம் இங்கு வருகிறேன். உம்முடைய பழைய கதை எல்லாம் சொல்லுமே!" என்றேன்.

"ஓஹோ! அப்படியா சேதி? எங்க அண்ணா சுத்த அசடு. ஏமாந்து சொல்லிக்கொண்டு கிடந்தான்? நான் சொல்ல வேண்டுமானால், என்ன தெரியுமா? உமக்குக் கிடைக்கிற லாபத்தில் சரி பாதி எனக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டாம்பு ஒட்டிப் பத்திரம் எழுதினால்தான் மேலே பேசலாம்!" என்றது.

"இப்பொ எல்லாம் புஸ்தக வியாபாரம் கொஞ்சம் மந்தம். நீர் அப்படியெல்லாம் கேட்கக் கூடாது!"

390

வேதாளம் சொன்ன கதை