"ரெண்டு பயல்களையும் அந்தத் தூணோடு வச்சுக்கட்டு! என்னலே மாடசாமி, சோலியப் பாக்கியா இன்னமும் வேணுமா?" என்றார் சிதம்பரம் பிள்ளை.
"முடியாதையா!" என்று முணுமுணுத்தான் மாடசாமி.
உள்ளே அழுதுகொண்டிருந்த பெண்களும் ரகளை பார்க்க வந்துவிட்டனர்.
"மிளாரெ எங்கடா?" என்று ஒன்றை வாங்கி முழங்காலிலும் முதுகிலும் மாறி மாறிப் பிரயோகித்தார். அவன் வலி பொறுக்கமாட்டாமல் குய்யோ முறையோவென்று கத்த ஆரம்பித்தான்.
அவன் மனைவி போட்ட ஓலத்தால் மருதப்பர் தூண்டுதல் என்பதும் எல்லோருக்கும் வெளியாயிற்று.
"பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? பிரிடீஸ் ராச்சியமா என்ன? ரொம்ப உறுக்கிரஹளே! மனிசனைக் கட்டிப் போட்டு அடிக்கதுன்னா நாய அநியாயமில்லையா - இண்ணக்கி சிரிக்கிரவுஹ நாளைக்கி வாரதையும் நினைச்சுப் பாக்கணும்!" என்றார் மருதப்பர்.
"நாசுவப் பயலா காரியமாத் தெரியலெயெ; வேலாண்டி, அவன் மொளியை (முழங்காலை)ப் பேத்துக் கையிலெ குடு! அவனுக்குக் குடுக்கிற கொடைலே இவன் சங்கெத் தூக்கணும்; என்ன பாத்துக்கிட்டு நிக்கே?"
வேலாண்டி கையிலிருந்த குறுந்தடியை ஓங்கி முழங்கால் குதிரையில் ஒரு போடு போட்டான். "ஐயோ அம்மா! என்னியப் போட்டுக் கொல்ராண்டோ ! ஊர்லே நாயமில்லியா! நீதியில்லியா!" என்று கதறினார் வைத்தியர்.
விசுவநாத பிள்ளை ஓடியே வந்து வேலாண்டியிடமிருந்த குறுந்தடியைப் பிடுங்கிக் கொண்டு, "அண்ணாச்சி, பாக்கச் சகிக்கலே - காரியத்தைப் பாத்துச் செய்யணும். சவத்துப்பய போரான்... அவ அதிட்டம் இப்படியிருந்தது; இந்தப் பயல்களுக்கும் இப்படிப் புத்தி போகுது..." என்று ஆரம்பித்தார்.
"எங்கை எப்படியிருக்குன்னு பார்லே!" என்று மறுபடியும் ஒரு குத்துவிட்டான் வேலாண்டி. மருதப்பன் பல்லில் முன்னிரண்டும் விழுந்துவிட்டன.
ரத்தங் கண்டதும் பீதியடித்துப் போன மாடசாமி, கண்களில் நீர் பெருக, சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தான்.
"சவத்தெ அவுத்து விடுடா! இந்தத் தெசேலே தலைவச்சுப் படுத்தா மாறுகால் மாறுகை வாங்கிப் போடுவேன், ஓடிப்போ நாயே!" என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை. அவிழ்த்துவிடப்பட்ட மருதப்பரும் மனைவியின் கைத்தாங்களில் நொண்டிக் கொண்டே தூரத்தில் சென்று, ஒரு பிடி மண் எடுத்து வானத்தில் எறிந்து, "இப்பிடி சுட்ட மண்ணாப் போகணும்! என் வயிரெரியிராப்லே போணும்" என்று ஏச்சு அழுகையுடனே கூவிவிட்டுச் சென்றார்.
புதுமைப்பித்தன் கதைகள்
423