பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதன் தன்னுடைய நம்பிக்கை வறண்ட கண்களைக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

"நீர் எப்பொழுதும் அங்கேயே இருக்கிறீரே?" என்று பதில் கேள்வி கேட்டான்.

"நான் என்ன செய்யட்டும்! உன்னை மாசுபடுத்தும் அந்தப் புழுதி தோய்ந்த கரங்களுடன், மார்புடன் என்னைக் கட்டித் தழுவ முயலுகிறாயே?"

"என்னைச் சிருஷ்டிக்க நீர் உபயோகித்த புழுதியைவிட்டு நான் எப்படி விலக முடியும்? அதை விட்டு விலகி நான் உம்மை எப்படி வரவேற்க முடியும்? நான் நிமிர்ந்து நேராக நிற்பதற்கே இந்தப் புழுதிதானே ஆதாரம்? புழுதியைக் கண்டு அஞ்சும் உமக்கு அதன் மீது நிற்கும் என்னை அறிந்து கொள்ளச் சக்தி உண்டா? நீர் அந்தச் சக்தி பெற்றுக் கீழே வரும் வரை நான் இந்தப் புழுதியில் கண்டெடுத்த - அதில் என்னோடு பிறந்த, என் சகோதரனான - இந்த இரும்புத் துண்டை வைத்து, என்னைப் பாதுகாத்துக் கொள்ளுகிறேன்!" என்று குனிந்து நெருப்பை ஊதலானான். குகையுள் பளபளவென்று மின்ன ஆரம்பித்தது.

2

உத்தானபாதனது குழந்தை தெய்வத்திடம் வரம் கேட்பதற்காகத் தபஸ் செய்யக் கானகத்திற்கு ஓடிற்று. மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் ஆகாய மார்க்கமாகச் செல்லும் பொழுது இக்குழந்தையைக் கண்டுவிட்டார்கள்.

ஸ்ரீதேவிக்குப் பசலைக் குழந்தையின் உறுதியைக் கண்டு பரிவு ஏற்பட்டுவிட்டது. தன் கணவருக்கு இருக்கும் அந்தக் 'காத்து அளிக்கும்' சக்தியை விவரம் தெரியாத குழந்தைகள் கூட அறிந்திருக்கின்றனவே என்பதில் ஒரு பூரிப்பு! கணவரைப் பார்த்துக் கொண்டாள்.

ஸ்ரீதேவியின் கடைக்கண் வீச்சுக்கிணங்கி வரங்களை வாரிச் சொரியக் குழந்தையை அணுகினார் மகாவிஷ்ணு.

குழந்தை ஓடிக்கொண்டிருந்தது.

பகற் கனவை ரஸித்துப் பல முறை ஏமாந்த குழந்தை அது. அதற்கு எதிலும் சர்வ சந்தேகம். மனத்தின் பேரில் அதற்கு அசைக்க முடியாத, நிரந்தரமான சந்தேகம்.

உத்தானபாதனது மடியில் உட்கார்ந்து விளையாடுவதாக, கொஞ்சுவதாக நம்பி எத்தனையோ முறை முன் ஏமாந்திருக்கிறதல்லவா?

மகாவிஷ்ணு சங்கு சக்கராயுதராக அதனை வழிமறித்து நின்று "குழந்தாய்!" என்று அழைத்தார்.

"நீ யார்?" என்று கேட்டது குழந்தை.

"குழந்தாய், என்னைத் தெரியாதா? நான் தான் மகாவிஷ்ணு!" என்று புன்சிரிப்புடன் தம்மை அறிவித்துக் கொண்டார்.


புதுமைப்பித்தன் கதைகள்

435