பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"போங்கள், உடை கசங்கிவிட்டால்?..." என்று எழுந்திருக்க முயன்றாள். அவள் எவ்வளவு விடுவித்துக்கொள்ள முயன்றும் அவன் அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டான்.

"பாருங்கோ! கசங்கிவிட்டதே!" என்றாள் கமலம்.

இருவருக்கும் கண்ணாடியில் சிறு பாகத்தைத் தவிர மற்றதெல்லாம் வெறும் பலகை என்பது ஞாபகத்திலில்லை.

அம்பி விசுவத்தின் பால்யத் தோழன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். ஆனால் அம்பி பணக்காரன். சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அவனும் அவன் மனைவி லட்சுமியும் வாழ்க்கை என்பது இன்பமயமான மோட்சம் என்றுதான் அறிந்தவர்கள். அம்பிக்கும், லட்சுமிக்கும், விசுவமும் கமலமும் வராத ஒரு விசேஷம் விசேஷமில்லை.

அன்று ஒரு விருந்து நடத்தவேண்டுமென்று தோன்றியது அம்பிக்கு. அத்துடன் நவராத்திரிக் கொலுவும் சேர்ந்துவிட்டால் கேட்பானேன்!

வீட்டு உள்ஹாலில் பொம்மைகள், விக்ரகங்கள் வைத்துக் கொலு அடுக்கியிருக்கிறது. லட்சுமியும் அவள் தோழிகளும் கம்பளத்தில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கிராமபோனில் முசிரி இவர்களுடைய மனத்தைக் கவர முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், வெறுப்புத் தோன்றாமல் பாட அவர் கிராமபோன் ப்ளேட்டாக மாறினால்தான் முடியும். அது அங்கு நடந்துகொண்டிருக்கிறது.

"அதோ, கமலா வந்துவிட்டாள்!" என்று எழுந்து ஓடினாள் லட்சுமி.

"வாருங்கோ!" என்று சிரித்துக்கொண்டு கமலத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றான்.

"அம்பி எங்கே?" என்றான் விசுவம்.

"அவர் மச்சில்லே இருக்கார்!" என்று கூறிவிட்டு உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள் லட்சுமி.

"அதார் விசுவமா? வாடா! ஏண்டா இவ்வளவு நேரம்? யூஸ்லெஸ் பெல்லோ! அப்படி என்ன ஆபீஸ் கேடு? வா உயர!" என்று கத்தினான் அம்பி.

மெத்தை வராந்தாவில் நாலைந்து நாற்காலிகளிடையே பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. இரண்டிலும் நண்பர்கள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அம்பி மட்டும் ஒரு குழந்தையைத் தோளில் சாத்தியவண்ணம் நடந்துகொண்டு அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். விசுவம் உயர வந்ததும், "அந்தப் பயலை இங்கு கொண்டு வா!" என்றவண்ணம் நெருங்கினான்.

482

பொய்க் குதிரை