சற்று ஆட்டி வைக்கக் கூடியது. பேசாமற் உள்ளே சென்று பெட்டியை திறந்து பார்த்தார் வீட்டில் ரொக்கமாக ரூ.2000-ந்தானிருந்தது. "ஏளா, அங்கே என்ன செய்யுறே" என்று மனைவியைக் கூப்பிட்டு கைவசமுள்ள நகைகளை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டார். கணவருடைய வேண்டுகோள் விபரீதமாகப்பட்டது. கர்ப்பிணி, அந்த சமயத்தில் நிதானித்துப் பேசுவதற்கு இயலுமா? யார்தான் சாதாரண காலத்தில் கூட தம்முடைய கணவரின் நண்பருக்காக கழுத்து நகையை அவிழ்த்துக் கொடுக்க சம்மதிப்பார்கள். அவள் முடியாது என்றதும், நண்பனது கஷ்டத்தைத் தீர்த்து வைப்பது தமது கடமைகளில் ஒன்று என்று நினைத்து, நிலத்தை அடமானம் வைக்க முற்பட்டார். இரண்டொரு புள்ளிகள் விற்பனை என்றால் சம்மதிப்பதாக சொன்னார்கள். இன்னும் இரண்டொரு நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கிய தொகை ரூ.5000-ம் போக மீதிக்கு நிலத்தை விற்றுக்கொடுப்பது என்று தீர்மானித்தார். சுப்பையா பிள்ளை இவ்வளவு அக்கறை காட்டுகிறதைப் பார்த்தால் இதில் ஏதோ சூது இருக்கிறது என்று சிலர் சந்தேகித்தார்கள். மறுநாளைக்கு பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்துகொள்ள சம்மதிப்பதாக பணம் கொடுக்கிறவரை இணங்க வைப்பதற்காக நிலத்தையும் அதற்கு இசைந்தாற்போல ஏராளமாக தியாஜியம் செய்ய வேண்டியிருந்தது. உமையொருபாகன் பிள்ளை கையில் ஏழாயிரத்துடன் டவுனுக்கு ஏகினார். மறுநாள் விற்பனைப் பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்து தொகையுடன் சுப்பையா பிள்ளையவர்கள் டவுனுக்குச் சென்றார். உமையொருபாகன் பிள்ளையையும் தொகையையும் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான்.
மூன்று நாட்கள் கழித்து உமையொருபாகன் பிள்ளை வைரத்தைப் பொடித்துத் தின்று மாண்டுபோனார். கடை முறிந்தது. ரூபாய்க்கு அரையணாக்கூடத் தேறாது எனச் செய்தி வந்தது.
மாலை ஐந்து மணி இருக்கும்; டவுனுக்கு காரியமாக சென்றிருந்த வேலப்ப பிள்ளை வேகுவேகென்று ஓடி வந்து தகவலைச் சொன்னார்.
பிள்ளையவர்கள் ஒன்றும் பேசவில்லை. வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். புகையிலையை எடுத்துச் சாவதானமாக போட்டுக் கொண்டு, "இருங்க தம்பி வர்ரேன்" என்று சொல்லிவிட்டுப் போனார்.
வருவதற்கு சற்று தாமதித்தது. வந்ததும் துண்டை உதறித் திண்ணையில் போட்டுவிட்டு, சாவதானமாக உட்கார்ந்தார்.
மடியிலிருந்த வைர நகைகள் சிலவற்றை எடுத்து மௌனமாக வேலாயுதம் பிள்ளையிடம் கொடுத்தார்.
"வேலையா, வண்டியைப் போடச் சொல்லுகிறேன்? நேரே ஸ்ரீ வைகுண்டத்துக்குப் போயி நம்ப சிதம்பர ஐயர் கடையிலே இதை விற்று தொகையைக் கொண்டு வா. நானும் ஒரு துண்டு எழுதித் தாரேன். காதோடு காதாக இருக்க வேண்டும். நான் இங்கேயே உறங்காமல் உட்கார்ந்திருப்பேன்; என்ன சொல்லுறே" என்றார்.
492
சொன்ன சொல்