அவருக்குச் சற்றுத் தூரத்தில் மாடுகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. கறுத்த காளை போன ஜன்மத்தில் வழிமறிச்சான் உத்தியோகம் போலும்! ரஸ்தாவில் பாதி தனக்கென்று படுத்துக் கொண்டிருந்தது.
இவர்கள் நடந்து வந்த திசையிலே, திருப்பத்துக்கு அப்பால், பூம்பூம் என்ற ஹார்ன் சப்தத்துடன் ஒரு வாடகை மோட்டார், கொள்ளுமட்டும் ஜனங்களை ஏற்றிக்கொண்டு பேரிரைச்சலுடன் ஐக்கிய ஜனநாயக நாடுகளின் 'ஏகோபித்த' அணி வகுப்பினர்களைக் கூட்டிக்கொண்டு திரும்பியது. வழிமறிச்சான் காளை உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தது. பஸ் டிரைவர் 'ஸ்டியரிங்' சக்கரத்தை ஒடித்துத் திருப்பினான். பஸ் எதிரிலிருந்த புளியமரத்தில் ஏற முயன்றது; கவிழ்ந்தது. உள்ளே குமைந்த ஜனக் குமைச்சல் பிரலாபிக்கும் ரத்தக் களரியாயிற்று. அதிலிருந்து ஜனங்களும் மூட்டை முடிச்சுகளும் வெளியே பிய்த்து எறியப்பட்டன. உள்ளே பலர் அகப்பட்டு நசுங்கினர். ஸ்டியரிங் சக்கரத்தின் மீது டிரைவரின் பிரேதம் கவிழ்ந்து படுத்திருந்தது. ஒடிந்த கண்ணாடித் துண்டு அவன் மூக்கைச் செதுக்கி எங்கோ எறிந்துவிட்டது.
பதறி அடித்துக்கொண்டு எழுந்திருந்தார் பிள்ளை. மோட்டாரின் அடியில் சிக்கிக் கிடப்பவர்களை விடுவிப்பது எப்படி என்று தெரியாமல், அர்த்தமற்ற கூப்பாடு போட்டுக்கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி ஓடிவந்தார். விபத்து பலமாகிவிட்டதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உலைப் பானையைச் சற்றும் கவனிக்காமல், கட்டை வண்டிக்காரன் வண்டியைப் பூட்டிக்கொண்டு குறுக்குப் பாதையாக ஓடி ஆட்களை அழைத்து வருவதாகச் சொல்லிச் சிட்டாகப் பறந்துவிட்டான். விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார். அவருக்கு எப்படி உதவி செய்வது என்று புரியவில்லை. இதற்குள் மோட்டார் வண்டியில் பின்னே இருந்தவர்கள் அதிர்ச்சியின் வேகம் அடங்கியதும் இறங்கினார்கள். செண்பகராமன் பிள்ளைக்கு மூட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்கத்தான் முடிந்தது. எதிரே கண்ட ஆபத்து அவரைக் கதிகலங்க வைத்துவிட்டது.
எதிரே வந்து போக்கு வண்டிகள் இரண்டொன்று நின்றன. அடிபட்டவர்களை அடுத்த ஊர் வரையில் ஏற்றிச் செல்லச் சம்மதித்தனர்.
கோடை இடி மாதிரி நிகழ்ந்த இந்த ரௌத்திர சம்பவத்தின் ஆரவாரம் ஒடுங்கி அந்த இடம் மறுபடியும் நிம்மதியாக இரண்டு மணி சாவகாசம் பிடித்தது.
தம்மை அழைக்கும் குரலின் மாயக்கூத்துப் போலத் தென்பட்டது பிள்ளைக்கு. ஆனால் ஒடிந்து வளைந்த இரும்பாக நின்ற வாடகை மோட்டார்தான் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் தழும்பாக, கண்களை உறுத்தியது.
புதுமைப்பித்தன் கதைகள்
583