பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அப்படியா, எங்கே நான் பார்க்க வேண்டுமே" என்று சொல்லிக் கொண்டு ஓடியது நாய்.

"மகாராஜா, மகாராஜா, மந்திரி பரிவாரம் இல்லாமல் தாங்கள் தனியாக ஓடலாமா" என்று சொல்லிக்கொண்டே பின் தொடர்ந்தது நரி.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் திரும்பி ஓடி வந்தது.

"என்ன அவசரம்? மகாராஜா எங்கே?" என்று கேட்டது முயல்.

"நாய்க்கு எப்பொழுதாவது ஜாதிப் புத்தி போகுமா? அதை மகாராஜா ஆக்கினதே பிசகு. தாங்களே மகாராஜா" என்று பல் இளித்தது நரி.

"என்ன ராஜத் துரோகம் பேசுகிறாய்? அர்த்த சாஸ்திரம் படித்த உனக்கு அடுக்குமா?" என்று கோபப்பட்டது முயல்.

"இனிமேல் தாங்களே எனக்கு மகாராஜா. எப்படியும் நாய், நாய்தான். ஓடிப்போய்த் தோட்டக்காரனிடம் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்குமா? அவன் அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டிப் போகிற வண்டியுடன் இழுத்துச் சென்றுவிட்டான்" என்றது நரி.

"மகாராஜாவைச் சிறைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்களாம்" என்று முயலினியிடம் தெரிவித்து வருத்தப்பட்டது முயல்.

"மகாராஜா, வருத்தப்பட்டு ஆகிற காரியம் எதுவும் இல்லை. இனிமேல் தாங்களே ராஜ்ய பாரத்தை ஏற்று நடத்த வேண்டும்" என்றது நரி.

"அதற்கென்ன, செய்தால் போகிறது. ஆனால் ஒரு நிபந்தனை. பகலில் நீ இங்கே தலைகாட்டக் கூடாது" என்றது முயல்.

'அதுவும் அப்படியா? அதற்கும் ஒரு வழி பண்ணுகிறேன்' என்று எண்ணமிட்டு, "ஆகட்டும் மகாராஜா" என்றது.

அன்று ராத்திரி நல்ல நிலா. கலெக்டர் ஓடிப் போகவில்லை கிழட்டுத் தோட்டக்காரனையும் கறுப்பு நாயையும் வேலைக்கு லாயக்கில்லை என்று விரட்டிவிட்டுத் துப்பாக்கியும் கையுமாக நின்றிருந்தார். கலெக்டர் பங்களாக் கோழிகளை ஜபித்துக்கொண்டு மந்திரி உத்தியோகம் பார்க்க வந்த நரி, அவருடைய துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி உயிரை விட்டது.

லதாக்ருஹத்தில் முயலினியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த முயல், வெடிச் சத்தம் கேட்டு, "இந்தப் பிரதேசமே ஆபத்துப் போல இருக்கே" என்று நடுநடுங்கியது.

"இதற்கு முன் பஞ்சவடி மாதிரி இருந்த இடம்; குட்டிச்சுவராகப் போச்சு" என்றது முயலினி.

"என்ன என்று பார்த்து வரட்டுமா?" என்றது முயல்.


புதுமைப்பித்தன் கதைகள்

625