பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு?" என்றாள் கிழவி.

"அவன் தான், நம்ம சங்குத் தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே!"

"சவத்தெ தள்ளும். எம் பாவத்துலெ வந்து விழாமெ இந்த மூங்கிலடியாணும் பேராச்சித் தாயுந்தான் காப்பாத்தணும்... என்ன, ஆச்சா?"

"இரு, இரு, ஒரு நொடி. இதெ மாத்ரம் ராவித் தாரேன்" என்று சொல்லி, ராவப்பட்ட பாம்படத்தையும், தங்கப் பொடியையும் இரண்டு சிவப்புக் காகிதங்களில் மடித்து மரியாதையாகக் கொடுத்தான். முத்தாச்சியும் மடியிலிருந்த முடிப்பையவிழ்த்து ஒரு கும்பினி ரூபாயை வைக்க, "என்ன! ஒனக்காக இண்ணக்கி முச்சோடும் கஞ்சி கூடக் குடியாமெ பண்ணித்தர, நல்ல வேலே செஞ்சை!" என்றான்.

"என்னெத்தான் தெரியுமே, ஏழெக்கி..."

"அப்பிடின்னா தொள்ளாளிக்கிக் கூலி குடாம முடியுமா?" என, அவனுடன் வாதாட நேரமில்லையென்று கருதிக் கேட்டதைக் கொடுத்துவிட்டு, நகையைப் பத்திரமாக முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெகு வேகமாய்க் காலாழ்வானைத் தட்டிவிட்டாள் கிழவி.

எவ்வளவு வேகமாக நடந்தாலும், மனித உடல் என்ன மோட்டார் வண்டியா? அதிலும் ஒரு கிழவி! கவிஞர் வெகு உற்சாகமாக வருணிக்கும் 'அந்தி மாலை' போய், இரவு துரிதமாக வந்தது. கிழவி போகும் பாதை ராஜபாதையானாலும், அக்காலத்தில் ஜன நடமாட்டமேயில்லாமல் மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப் பாதை. இருள் பரவ ஆரம்பித்தது என்றால் - வெகுவாக அர்த்த புஷ்டியுடைய வார்த்தைகள் அல்ல - கிழவி கூறிய மாதிரி 'தன் கை தெரியாத கும்மிருட்டு'.

கிழவி இதுவரை பேய்க்கும் பயப்பட்டவள் அல்லள், திருடருக்கும் பயப்பட்டவள் அல்லள். ஆனால் இன்று, ஒவ்வொரு மரத்தடியிலும் ஒவ்வொரு சங்குத் தேவன்! மரக் கிளைகள் மீது குதிக்கும் தருவாயில் பதுங்கியிருக்கும் சங்குத் தேவன்! இவ்வாறு ஒவ்வொரு மரத்தைத் தாண்டுவதும் ஒரு வெற்றியாக, தனது மனவுலகில் தோன்றும் சங்குத் தேவர்களிடம் தப்பித்துக்கொண்டே செல்கிறாள்.

இப்படி அவள் தவித்துத் தவித்துச் செல்லும்பொழுது, தனக்கு முன் சிறிது தூரத்தில் ஓர் இருண்ட கரிய உருவம் தோன்றலாயிற்று. கிழவியின் வாய் அவளை யறியாமலே, "சங்குத் தேவன்!" என்று குழறிற்று. கால் கைகள் வெடவெடவென்று நடுங்கின. முன் அடியெடுத்துவைக்க முடியவில்லை. மடியை இன்னொரு முறை இறுக்கிச் சொருகிக்கொண்டு, "ஏ, மூங்கிலடியான்! நீதான் என்னைக் காப்பாத்த-

புதுமைப்பித்தன் கதைகள்

63