"அவன் பி.ஏ.லெ முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்கிறான்" என்றார் பெருமாள் பிள்ளை.
"அப்போது சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியுமா?" என்றார் கலெக்டர்.
"எதிர்பார்க்கப்படாத இடத்தில் பேசாமல் இருப்பது" என்றான் சுப்பிரமணியம்.
சிறுவனுக்கு தனது முந்திய வார்த்தைகள் ரொம்பவும் துன்பப் படுத்திவிட்டன என்பதைக் கண்டுகொண்ட கலெக்டர், எழுந்து வந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு "நிஜமாக நான் வருத்தப் படுகிறேன்" என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.
"சிறுவன்தானே, அதொன்றும் பிரமாதமில்லை. அவனுக்காக நீங்கள் வருத்தப்படுவதாவது; நல்ல வேடிக்கை" என்றார் பெருமாள் பிள்ளை.
"ஏன் இவரை ஐ. ஸி. எஸுக்கு அனுப்பக் கூடாது? ரொம்பக் கெட்டிக்காரராகத் தோணுகிறதே; ரொம்ப கூச்சம் போலத் தெரிகிறது. அதிகாரத்தைக் கையில் கொடுத்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்" என்றார் கலெக்டர்
"ஐ.ஸி.எஸுக்கு என்றால் என் குடும்ப நிலைக்கு ஒத்துவராது. இவனுடைய தாயார் ஒரு வியாதியஸ்தி. இவன் எப்பொழுதும் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவள்; இவன் வேலையே பார்க்காமல் வீட்டோடு இருந்தாலும் அவளுக்கு திருபதி. ஆனால் எனக்கு என் குடும்பத்திலிருந்து யாராவது ஒருத்தர் செர்வீஸிலிருக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்தியர்கள் வேறு எந்த மாதிரி விசுவாசத்தைக் காட்ட முடியும் இந்தக் காலத்திலே.." என்று முடுக்கி விட்ட அலாரம் டைம்பீஸ் மாதிரி பேச ஆரம்பித்தார் பெருமாள் பிள்ளை.
கலெக்டர் அதற்கு விட்டுக்கொடுக்காமல், "உனக்கு இந்த நாட்டில் தோன்றி இருக்கிறதே சுதந்திர இயக்கம். அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டார் கலெக்டர்.
"நான் அவ்வளவாக ஈடுபட்டதில்லை; படிப்பைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்றிருந்தேன். சுதந்திரம் எல்லாருக்கும் இயற்கைதானே" என்றான் சுப்பிரமணியம்.
"சுதந்திரம் இயற்கை அல்ல; மனிதனுக்கு இரண்டுவித குணங்கள் தானுண்டு. ஒன்று அதிகாரத் திமிர்; இரண்டாவது கட்டின சங்கிலிக்குப் பூமாலை போட்டு பூசை பண்ணுவது. அடிமைத்தனத்திலே, அதிகாரத்தை வைத்திருப்பவன் சாதாரண க்ஷேமத்தை காப்பாற்றித் தருகிறான். சாதாரண மனிதருக்கு சாதாரண க்ஷேமம் தானே மோட்சம். அதனால்தான் ஆளமுடிகிறது ..."
"நிஜமான க்ஷேமத்துக்காக சாதாரண மக்கள்கூட சாதாரண க்ஷேமத்தை விட்டுக் கொடுப்பார்களே ..." என்று கலெக்டர் தர்க்கத்தைப் பின்பற்ற முயன்றான் சுப்பிரமணியம்.
762
அன்னை இட்ட தீ