"நாளைக்கு கொண்டு வந்து விடுகிறேன், ஸார்."
"நாளைக்கு அடிக்கலை ஸார். நீட்டு கையை. உம்!"
"ஐயோ; ஐயோ! வலிக்குமே ஸார். இல்லை ஸார்."
"வலிக்கத்தான் ஸார் அடிக்கிறது."
பளீல்! பளீல்! பளீல்...
ரணகளம்.
"ஏறு பெஞ்சி மேலே!"
இன்னும் எத்தனை பாடங்கள்! அத்தனை 'ஸார்'களும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டிவிட்டே சென்றார்கள். மறுபடியும் அந்த 'ஸார்' வருகிறாரே பூகோளத்திற்கு!
மணியடிச்சாச்சு; அவரும் வந்தாச்சு.
கண்ணாடியைப் போட்டாச்சு. தலைப்பாகையும் கழற்றி வைத்தாச்சு. ஐயோ அந்தப் பிரம்பு!
"கிருஷ்ணா, இந்தியாவின் வடக்கெல்லை?"
"இமயமலை ஸார்."
"நீதாண்டா பிச்சா, எழுந்திரு. தெற்கே?"
"வங்காளக் குடாக் கடல் ஸார்."
"என்ன?"
"இல்லை ஸார்... அரபிக் கடல் ஸார்... ஸார், ஸார், இந்து மகா சமுத்திரம் ஸார்."
"டேய் ராமசாமி, படித்திருக்கையா? இந்தியாவின் தலைநகரம்?"
மெதுவாக 'டெல்லி' என்று முனகுகிறான்.
"என்ன?"
"இல்லை ஸார், இல்லை ஸார்!"
"ஏண்டா முழிக்கிறே! படிச்சாத்தானே? வா இப்படி 'மாப்' (Map)கிட்டே. எங்கே காமி பார்ப்போம்?"
இந்தியா படத்தின்மேல் ஒரு சிறு விரல் ஊர்கிறது; கண், பிரம்பின் மேல்.
"எங்கே காமி! படிச்சாத்தானே!"
'பளீல்' என்று பிரம்பு இறங்குகிறது. தறிகெட்டு வேட்டையாடும் பிரம்பு, தடுக்க முயலும் சிறு கைகள், "ஐயோ, அம்மா, அப்பா, ஹோ உம் ங்... ங்... அம்மாடி!..."
"அம்மாடி! போ கழுதை. வெளியே இருந்து படித்து ஒப்பித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போக வேணும். என்னிடமா?"
வெளியே நெட்டித் தள்ளுகிறார். புஸ்தகத்தோடு போய் விழுகிறான் அப்படியே.
புதுமைப்பித்தன் கதைகள்
81