பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தேவைப்பட்டது. அவர் பண உதவி கோரி இலங்கை நண்பருக்கும் சென்னை நண்பர்களுக்கும் எழுதினார்.

தமிழ்நாட்டில் இலக்கியப் படைப்பில் ஈடுபடுகிற எழுத்தாளர்களின் வாழ்க்கை என்றும் வேதனைக்கும் சோதனைகளுக்கும் உரியதாகவே இருந்து வருகிறது. அவர்களுடைய குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவுக்குக் கூட எழுத்துமூலம் வருமானம் கிடைப்பதில்லை. பல படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாறு இதற்குச் சான்றாகும்.

புதுமைப்பித்தனோடு ‘மணிக்கொடி’யில் படைப்பிலக்கிய முயற்சியில் ஈடுபட்டு, சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற புகழைப் பெற்றிருந்த கு.ப. ராஜகோபாலன் 1944-ல் வறுமை நிலையிலேயே இறந்துபோனார். அப்போது அவரது குடும்பத்துக்கு உதவி நிதி வசூல் செய்யப்பட்டது.

திறமைசாலிகளான எழுத்தாளர்கள் அவர்களது வாழ்நாளில் உரிய முறையில் கவனிக்கப்படாமல் விடப்பட்டு, அவர்கள் இறந்ததற்குப் பிறகு அவர்களை வியந்து பாராட்டி, விழா எடுத்து நிதி திரட்டி கவுரவிக்கிற போக்கைப் புதுமைப்பித்தன் வெறுத்தார்.

கு.ப.ரா. இறந்த பிறகு நிதி திரட்டும் முயற்சிகள் நடைபெற்ற காலத்தில், புதுமைப்பித்தன் நையாண்டியாக ஒரு கவிதை எழுதினார். ‘ஒகோ உலகத்தீர்! ஓடாதீர்’ என்று. அதில் அவர் கூறினார் ‘ஐயா, நான் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்! நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர்!’

இப்படி 1944 ல் எழுதினார் அவர். 1948-ல் ‘நான் நோயினின்று குணமடைவதற்காக யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களும் வாசகர்களும் எனக்குப் பண உதவி செய்ய முடியுமா? என்றும் தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். தமிழ் நாட்டாரைப் பார்த்து, நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்க உரிமை உண்டு. என் நிலையைப்பற்றிப் பத்திரிகைகளுக்கு எழுதி உதவி தேடுங்கள் என்றும்