பக்கம்:புது வெளிச்சம்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகில் கோடீசுவரனாலும் எய்த இயலாத உயர்ந்த நிலை சுயாதீன நிலை. சுருங்கக் கூறின் இருதயத்தில் உண்மையை மட்டும் அழுத்தமாகப் பதித்துக் கொண்டால் போதும் புகழ்ச்சி அனைத்தும் அவனைத் தேடி வந்து ஒன்றிக் கொள்ளும். பொய்மை அவன் முகத்தைப் பார்க்கும் போதே அஞ்சி மறையும். அவனுடைய உள்ளத்தில் துன்பத்திற்கு இடம் கிடையாது. முல்லை மலரின் நறுமணம் போல சுயாதீனனின் சொல் ஒவ்வொன்றும் மணங்கமழ் வனவாகவே இருக்கும்.

அவனுடைய நிலை அத்வைத நிலை. அதாவது நான்வேறு. தெய்வம் வேறு அன்று, 'சோ அகம் அஸ்மி' - 'நானே அந்தத் தெய்வமாயுள்ளேன்' என்று கூறாமல் தோன்றும் நிலை!

இந்த நிலையை உபநிசத்து விளக்குகிறது. "இதுதான் இவனுக்கு ஆசைகள் ஒழிந்த நிலை; பாவங்கள் தேய்ந்த நிலை; பயமற்ற நிலை; இதுதான் இவனுக்கு ஆசைகள் பூர்த்தியான நிலை: ஆத்மா ஒன்றே விரும்பப்படும் நிலை; ஆசை எழாத நிலை; துன்பம் கடந்த நிலை.

திருமந்திரம் இந்த நிலையை நான்குவரிகளில் விளக்குகிறது.

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே - தானென்று நா
னென்றி ரண்டிலாத தற்பதம் - தானென்று நானென்ற தத்துவங்களாக
தானென்றும் நானென்றும் சாற்றுகில்லேனே

"வேதங்களைக் கற்றதாலோ, நுண்ணறிவினாலோ, விரிந்த கேள்வியாலோ இந்த ஆத்மா (சுயாதீனநிலை) ஒரு சாதகனால் அடையப்படுவதன்று: சாதகன், எப்போது ஆத்மா ஒன்றையே ஆத்மாவினால் பிரார்த்திக்கின்றானோ அப்போது அவனால் அடையப்படும். அவனுக்கு அப்போது இந்த ஆத்மா தன்னுடைய உண்மை சுரூபத்தைப் பிரகாசப்படுத்துகிறது” என்கிறது கடோபநிசத்து.

எனவே, நண்பனே! நீ இந்த உடல் அல்ல, உயிருமல்ல. உள்ளமாயிருக்கிறாய். உள்ளத்தில் உண்மையை மட்டும் வைத்துக்கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டதன்பயனாய் மேலும் அமரனாகிறாய்!

86 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்