பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி. வேங்கடசாமி / 9

முதன்மையானவன். இதுவே என்னுடைய கடைசி பிறப்பு. இனி எனக்கு வேறு பிறவி இல்லை;" என்று அந்தத் தெய்வீகக் குழந்தை கூறிற்று.

மாயாதேவியாருக்குக் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டவுடனே, கபிலவத்து நகரத்திலிருந்தும் தேவதகா நகரத்திலிருந்தும் சுற்றத்தார் உலும்பினி வனத்திற்கு வந்து போதிசத்துவராகிய குழந்தையையும் மாயாதேவியாரையும் கபிலவத்து நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

போதிசத்துவர் பிறந்தருளிய அதே வேளையில் யசோதரை தேவியாரும், சன்னன், காளுதாயி என்பவர்களும் தோன்றினர்; கந்தகன் என்னும் குதிரையும், போதிமரமும் நான்கு தாழி நிதிக்குவியலும் தோன்றின.

அசித முனிவர் கூறிய தீர்க்கதரிசனம்

சுத்தோதன அரசருடைய தகப்பனாரான சிங்கஹணு அரசருக்கு அசிதர் என்னும் பெயருள்ள புரோகிதர் ஒருவர் இருந்தார். இந்தப் புரோகிதர்தான் சுத்தோதன அரசருக்கு அவர் சிறு பிள்ளையாயிருந்தபோது - வில்வித்தை முதலிய கலைகளைக் கற்பித்தார். சிங்கஹணு அரசர் காலஞ்சென்ற பிறகு அசிதர் தமது புரோகிதத் தொழிலைவிட்டு, அரசருடைய ஆராமத்தோட்டத்திலே தபசு செய்துகொண்டிருந்தார். அசித முனிவர் ஐந்துவிதமான அபிக்ஞைகளையும் எட்டு விதமான சமாபத்திகளையும் அடைந்தார். சில வேளைகளில் இவர் தமது சித்தியினாலே தேவலோகத்திற்குப் போய், அங்குத் தங்கித் தபசு செய்துவிட்டு மீண்டும் தமது இடத்திற்குத் திரும்பி வருவது வழக்கம்.

போதிசத்துவர் மாயாதேவியார் திருவயிற்றிலே தங்கிக் குழந்தையாகத் திருவவதாரம் செய்திருப்பதை அசித முனிவர், அறிந்து அக்குழந்தையைக் காண்பதற்காக அரண்மனைக்கு வந்தார். சுத்தோதன அரசர் முனிவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து வணங்கி நின்றார். அப்போது அசித முனிவர், "அரசே! உமக்கு ஆண் மகன் பிறந்த செய்தி அறிந்து இவ்விடம் வந்தேன். அக்குழந்தையை நான் பார்க்க வேண்டும்" என்று கூறினார். இதைக்கேட்ட அரசர் தாமே தனது கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு வந்து முனிவருக்குக் காட்டி, "மகனே! முனிவரை வணங்கி நற்பேறு பெறுக" என்று கூறினார். அப்போது குழந்தையின் பாதங்கள் முனிவருடைய தலையில் பட்டன. ஏனென்றால், போதி சத்துவர்கள்