பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 / புத்தரின் வரலாறு

ஆறு நாட்கள் கழிந்தன. பரிசளிக்கப்படும் ஏழாம் நாள் வந்தது. சித்தார்த்த குமாரன் வந்துஅரண்மனையின் மண்படத்தில் உயரிய ஆசனத்தில் அமர்ந்தார். நாட்டிலுள்ள உயர்குடிப்பெண்கள் எல்லேரும் அரண்மனைக்கு வந்தார்கள். வந்து ஒவ்வொருவராக அரசகுமரனை அணுகிப் பரிசுகளைப்பெற்றுச்சென்றார்கள். அரச குமாரனுடைய கம்பீரமான தோற்றத்தையும், அழகையும் கண்ட அம்மங்கையர் எல்லோரும், அரசகுமாரனை நேரே முகத்தைப் பாராமல் தலைகுனிந்த வண்ணம் சென்று வணக்கம் செய்து அவர் கொடுத்த பரிசைப் பெற்றுக்கொண்டு போனார்கள். இவ்வாறு பரிசு நகைகள் எல்லாம் வழங்கப்பட்டன.

கடைசியாக, சாக்கிய குலத்து மகாநாமர் என்பவர் மகளான யசோதரை என்னும் கன்னிகை தாதியர் சூழ அவ்விடம் வந்தார். வந்து அரச குமாரனை அணுகி, அவருடன் நெடுநாள் பழகியவர்போல, "குமார! எனக்கு என்ன பரிசுகொடுக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.

"நீ நேரஞ்சென்று வந்தாய். பரிசுகளைக் கொடுத்தாய்விட்டது" என்றார் சித்தார்த்த குமாரன்.

"நான் என்ன தவறு செய்தேன்? எனக்கென்று ஏதேனும் பரிசு வைத்திருக்கக்கூடாதா?" என்றார் யசோதரையார்.

"உனக்குப் பரிசு கொடுக்கக்கூடாதென்பதல்ல. நீ நேரங்கழித்து வந்தது தவறு" என்று சொல்லி, தனது கைவிரலில் அணிந்திருந்த ஆயிரம்பொன் விலையுள்ள கணையாழியைக் கழற்றி கொடுத்தார். யசோதரைக்குமாரி, "குமார! வேறு எதையேனுங் கொடுங்கள்" என்று கேட்டார்.

"வேண்டுமானால் என் கழுத்திலிருக்கும் முத்துமாலையை எடுத்துக்கொள்."

"தங்கள் கழுத்துக்கு இந்த முத்துமாலை வெகு அழகாக இருக்கிறது! அது அங்கேயே இருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு யசோதரை குமாரி புன்சிரிப்புடன் போய்விட்டார்.

சுத்தோத்தன அரசன் ஏவலின்படி தூரத்திலிருந்து கருத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஒற்றர்கள் இச்செய்தியை அரசருக்குத் தெரிவித்தார்கள்.யசோதரை குமாரி வந்ததும் குமாரனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும் அவருக்குக் குமாரன் மோதிரத்தையும் முத்துமாலையையும் வழங்கியதையும் பிறகு யசோதரை போய்விட்டதையும் விவரமாகக் கூறினார்கள். அரசர் மனம் மகிழ்ந்தார்.