பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 53

என்று அவர் தமக்குள் எண்ணிக் கொண்டார். அதிக வெயில், அதிகக் குளிர் முதலிய தட்ப வெப்ப நிலைகளைப் பற்றியும் மனத்தில் விருப்பு வெறுப்புக் கொள்ளக்கூடாது என்றும் அத்தகைய எண்ணங்களையும் தடுக்க வேண்டும் என்றும் தம்முள் கருதினார்.

தமது ஆசிரமத்தைச் சூழ்ந்துள்ள காடுகளில் புலி, மான், பன்றி முதலான மிருகங்களுக்குத் துன்பம் உண்டாவதைக் கண்டார். பிச்சைக்காகக் கிராமத்தில் போகும்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிற மக்களைக் கண்டார். சிலர் மற்றவர்களுக்குத்துன்பம் உண்டாக்குகிற கொடுமைக் காட்சியையுங் கண்டார். இவைகளைக் கண்டபோது இவருக்கு மனத்திலே வருத்தம் உண்டாயிற்று. அப்போது இப்போது நினைப்பதுகூட தவறு. இப்படி நினைப்பதினாலே மனம் சிதறுகிறது என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

மனத்திலே ஏற்படுகிற எண்ணங்களையெல்லாம் நல்லவை என்றும் தீயவை என்றும் இரண்டு விதமாகப் பகுத்துப் பார்த்தார். தமது உள்ளத்திலே தோன்றுகிற நல்ல எண்ணங்கள் தமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் என்று நினைத்தார். இந்த நல்ல எண்ணங்களினாலே புத்த பதவியும் கிடைக்கும் என்று அவர் கருதினார். இவ்வாறு இரண்டு விதமான எண்ணங்களைப் பற்றி விழிப்புடனும் ஊக்கத்தோடும் இரவும் பகலும் எண்ணிக்கொண்டே மனத்திற்கு அதிக வேலை கொடுத்துக் கொண்டிருந்தபடியினாலே அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார்.

உள்ளத்திற்கு அமைதி ஏற்படாதபோது உடலுக்கும் அமைதி ஏற்படாது. ஆகையினாலே, மனத்திற்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்க, தியானத்தில் அமர்ந்து அமைதியை உண்டாக்கினார். தம்மையும் மீறித் தீய எண்ணங்கள் வந்தால் உடனே அவைகளை நீக்கி நல்ல எண்ணங்களையே நினைத்தார். இவ்வாறு மனத்தை ஒருநிலைப்படுத்தி அதனைப் பயன்படுத்தக் கடுமையான முயற்சி செய்து கொண்டு ஆறு ஆண்டுகளைக் கழித்தார்.

ஐந்து கனவுகள்

வைகாசித் திங்கள் வளர்பிறையின் பதினான்காம் நாள் இரவு போதி சத்துவராகிய கௌதம முனிவர் கண் உறங்கிக் கொண்டிருந்தபோது கடைசி யாமத்திலே ஐந்துவிதமான கனவுகளைக் கண்டார். அந்தக் கனவுகள் இவை: