பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 / புத்தரின் வரலாறு

கபிலவத்து நகரத்திலே ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக்களில் ஆஷாடவிழா என்பதும் ஒன்று. இந்த விழா வேனிற்காலத்திலே ஆறு நாட்கள் கொண்டாடப்படும். இவ்விழாவின்போது நகர மக்கள் ஆடை அணிகள் அணிந்து, விருந்து உண்டு, ஆடல் பாடல் வேடிக்கை வினோதங்களில் மகிழ்ந்திருப்பர். சுத்தோதன அரசரும் நறுமண நீரில் நீராடி உயர்ந்த ஆடை அணிந்து நறுமணம் பூசி அறுசுவையுண்டி அருந்தி அரசவையிலே அமைச்சர், சேனைத் தலைவர் முதலிய குழுவினர் சூழ அரியாசனத்தில் வீற்றிருந்து ஆஷாட விழா கொண்டாடுவார்.

வழக்கம்போல ஆஷாட விழா வந்தது. நகர மக்கள் அவ்விழாவை நன்கு கொண்டாடினர். அரண்மனையில் அரசியாராகிய மாயா தேவியாரும் இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆறு நாட்கள் விழா கொண்டாடிய பிறகு ஏழாம் நாளாகிய ஆஷாட பௌர்ணமியன்று மாயாதேவியார் நறுமண நீராடி நல்லாடை யணிந்து ஏழை எளியவருக்கும் ஏனையோருக்கும் உணவு உடை முதலியன வழங்கினார். பின்னர் தாமும் அறுசுவை உணவு அருந்தி அஷ்டாங்க சீலம் என்னும் நோன்பு நோற்றார். இரவானதும் படுக்கையறை சென்று கட்டிலிற் படுத்துக் கண்ணுறங்கினார். இரவு கழிந்து விடியற் காலையில் ஒரு கனவு கண்டார்.

மாயாதேவியார் கண்ட கனவு இது; இந்திரனால் நியமிக்கப்பட்ட திக்குப்பாலர்களான திருதராட்டிரன், விரூபாக்கன், விரூளாக்ஷன், வைசிரவணன் என்னும் நான்கு தேவர்கள் வந்து மாயாதேவியார் படுத்திருந்த படுக்கையைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டுபோய், இமயமலைக்குச் சென்று அங்கிருந்த மனோசிலை என்னும் பெரிய பாறையின் மேலே ஒரு சால மரத்தின் கீழே வைத்து ஒருபுறமாக ஒதுங்கி நின்றார்கள். அப்போது அந்தத் தேவர்களின் மனைவியரான தேவிமார் வந்து மாயாதேவியாரை அழைத்துக்கொண்டுபோய் அருகிலிருந்த அறுவதப்தம் என்னும் ஏரியில் நீராட்டினார்கள். நீராட்டிய பின்னர் உயர்தரமான ஆடை அணிகளை அணிவித்து நறுமணச் சாந்து பூசி மலர்மாலைகளைச் சூட்டினார்கள். பிறகு, அருகிலே இருந்த வெள்ளிப் பாறையின் மேல் அமைந்திருந்த பொன் மாளிகைக்குள் மாயாதேவியாரை அழைத்துக்கொண்டுபோய் அங்கிருந்த ஒரு கட்டிலில் மேற்குப் புறமாகத் தலைவைத்துப் படுக்கவைத்தனர்.

மாயாதேவியார் படுத்திருந்தபோது, அருகிலிருந்த மலைகளின் மேலே மிக்க அழகுள்ள வெள்ளையானையின் இளங்கன்று ஒன்று உலாவித் திரிந்து கொண்டிருந்தது. அந்த யானைக்கன்று பொன்