146
புறநானூறு செய்யுளும் செய்திகளும்
124. மலையமான் திருமுடிக்காரி
அருவி ஒலிக்கும் நாடன் அவனைப் பாடுவோர் நாள் பார்த்துச் செல்லத் தேவையில்லை. புள் சகுனம் தடையாக இருந்தாலும் துணிந்து செல்லலாம். திறன் அற்ற பாடல்களைப் பாடினாலும் அதை அவன் பொருட்படுத்துவதில்லை. புலவர் என்று சென்றால் போதும். அவர்கள் பரிசில் பெறாது திரும்புவதில்லை.
நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும்,
வறிது பெயர்குநர்அல்லர்-நெறி கொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடியோரே.
திணையும் துறையும் அவை,
அவனை அவர் பாடியது.
125. மலையமான் திருமுடிக்காரி
அண்மையில் நடந்த போரில் வெற்றி பெற்றவன் என்ன கூறுகிறான்? நீ அவர்களுக்குத் துணைக்கு வரவில்லை என்றால் இந்த வெற்றி தனக்கு வாய்த்திருக்காது என்றுதான் பேசுகிறான்.
தோற்றவன் என்ன கூறுகிறான்? நீ இல்லை என்றால் அவர்கள் தோற்றிருக்க மாட்டார்கள் என்றுதான் பேசுகிறான்.
வென்றவனும் உன்னைத்தான் குறிப்பிடுகிறான்; தோற்றவனும் உன்னைத்தான் குறிப்பிடுகிறான்.
போர் வெற்றி தோல்விகளுக்கு நீயே காரணமாக இருக்கிறாய்.
உழைத்துப் பெறும் பரிசில் நீ அடையும் பொருள். உழுது அதன் பின் எருது வைக்கோல் தின்கிறது. அதுபோன்று நீ பாடுபட்டுப் பொருளை ஈட்டுகிறாய். நீ உண்ணும் கள்அமிழ்தாக அமைக.
யாம் உன்னை நாடி வருகிறோம்; பருத்தி நூற்கும் பெண்டிர் அவர்தம் பஞ்சு போல் நீ தரும் இறைச்சித் துண்டு சுடச்சுட