404
புறநானூறு - மூலமும் உரையும்
பாடிய ஆயும் (புறம் 158) எனப் பெருஞ்சித்திரனார் கூறுகின்றார். ஆகவே, இவரால் மிகுதியாகப் பாடப்பெற்றவன் ஆய் வள்ளலே எனலாம். ஆடு மகள் குறுகின் அல்லது பீடு செழு மன்னர் குறுகலோ அரிதே' (புறம் 128) என, ஆயது பொதியிலை இவர் சிறப்பிக்கின்றார். காடும் ஆயைப் பாடிப் பரிசில் பெற்றதனாலோ இத்துணை யானைகளை உடைத்தாயிற்று' எனப் பாடும் (புறம் 130) இவர், ஆயின் கொடை நலத்தை வியந்து போற்றுகின்றார். ‘தென்திசை ஆய் குடி இன்றாயின் இவ்வுலகமே நிலை பிறழும்' (புறம் 132) எனவும் இவர் புகழ்கின்றார். அறவிலை வாணிகன் ஆய் அலன் (134) என, அறத்திற்கு ஒரு தகுதியான நெறியை வகுத்தவர் இவர். ஆயின் மறைவுக்கு இரங்கிப் பாடிய இவரது செய்யுட்கள் உள்ளத்தை உருக்குவன ஆகும்.
உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60, 170, 321
உறையூரின்கண் மருத்துவராகவும் புலவராகவும் சிறப்புற்றிருந்தவர் இவர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் இவர் பாடியுள்ளனர். “காட்டகத்து வெண்ணிலவைக் கண்டதும், வளவனின் கொற்றக் குடைபோலும் எனக் கருதித் தொழுது போற்றியதாகக் கூறும் (புறம்.6) செய்யுள் நயமானது ஆகும். பிட்டங்கொற்றணின் வல்லாண்மையைக் கூறும் இவரது செய்யுளால் (புறம்.170) அக் காலத்துக் கொல்லரின் பட்டறையைப் பற்றிய செய்தியை நாம் அறியலாம்.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30, 325
முதுகண் என்பது அரசர்க்கு உசாத்துணையாக விளங்குவாரின் பட்டப்பெயர். ஆதலின், சாத்தனார் என்னும் இவர் அத் தகுதியோடு வாழ்ந்தவர் எனலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடியவாக அமைந்த இச் செய்யுட்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார் பேணவேண்டிய சிறந்த உறுதிப் பொருள்களைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அக் காலச் சோணாட்டின் வளமையும் கொடையினது மேம்பாடும் இவரால் அழகுறக் காட்டப் பெறுகின்றன. 'விழவிற் கோடியர் நீர்மை போல, முறை முறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்துக் கூடிய நகைப்புறனாக நின் சுற்றம், இசைப்புறனாக நீ நம்பிய பொருளே’ (புறம் 29) என, அரசனுக்கு அறவுரை கூறுகின்றார் இவர். உறையூர் முதுகூத்தனார் 331
உறையூரின்கண் கூத்துத் துறையில் பெரும்புலமை பெற்றோராகவும், தெளிந்த தமிழ்ப் புலவராகவும் விளங்கியவர் இவர். ஒரு மறவனது பசிதீர்க்கும் பண்புநலனை மிகவும் திட்பமாக