பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

பதிப்புரை

நமக்குக் கிடைத்துள்ள முதல் தமிழ்நூல் மிகப்பழந் தமிழ் நூல்

தொல்காப்பியமே. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளாதிகாரம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது.

எழுத்ததிகாரம் - எழுத்திலக்கணம் கூறுகிறது. சொல்லதிகாரம் - சொல்லிலக்கணம் கூறுகிறது. பொருளதிகாரம் - பொருளிலக்கணம் கூறுகிறது.

அதாவது தமிழர் வாழ்க்கை இலக்கணம் கூறுகிறது. அந்த வாழ்க்கையினை அக வாழ்க்கை என்றும்; புற வாழ்க்கை என்றும் இருகூறாகப் பிரித்து இலக்கணம் கூறுகிறது.

அகவாழ்க்கை - காதல் வாழ்க்கையினை அதாவது இல்லற

- வாழ்க்கையினைக் கூறுவது. புற வாழ்க்கை - வீரம், கொடை ஒழுக்கம், கல்வி

முதலியவற்றைக் கூறுவது. புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நானூறு செய்யுள்களைக் கொண்டமைந்தது புறநானூறு என்னும் நூலாகும். இந்நூலுள் - வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவை கூறப்பெற்றுள்ளன. புறநானூறு - ஆசிரியப்பாக்களால் ஆனது. வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு கிறித்துவ மதத்தைப் பரப்பவந்த ஜி.யூ.போப்பு, புறநானூற்றைப்படித்ததன் விளைவு அவரைத் தமிழின்பால் மிகவும் ஈர்த்தது என்று கூறலாம்.

இந்தப் புறநானூற்றுப்பாக்களுக்குப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் உரை இயற்றி வெளியிட்டுள்ளனர். சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு எளிய உரை இயற்றிப் பல்கலை - கல்லூரி - பள்ளி மாணவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவர் புலவர் புலியூர்க் கேசிகனார். இந்தப் புறநானூற்று நூலுக்கும் புலவர் புலியூர்க் கேசிகனாரே உரை இயற்றியுள்ளார்.

இனிய - எளிய உரை, தெளிவான உரை. புலியூர் கேசிகனாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கிய பின்பு அவர்தம் படைப்புகளைத் தொடர்ந்து எங்களது பதிப்பகத்தின் வாயிலாகச் சிறந்த முறையில் வெளியிட்டு வருகின்றோம். அதே முறையில் இந்தப் புறநானூறு மூலமும் உரையும் கொண்ட நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். பல்கலைக் கழகப் பேராசிரியர் - கல்லூரிப் பேராசிரியர் - பள்ளி ஆசிரியர் - கவிஞர் - புலவர் - அறிஞர் - பல்கலை - கல்லூரி - பள்ளி' மாணவர் அனைவரும் பெற்றுப் பயனடைய வேண்டுகின்றோம்.

சிறந்த பதிப்பில்-குறைந்த விலையில் புறநானூறு. புறநானூற்றை வாங்குங்கள்!

அகத்தினில் அவற்றைத் தேக்குங்கள்! . - பதிப்பகத்தார்