பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71


“நலங்கிள்ளி! நெடுங்கிள்ளி சோழர் குடியின் பெருமையைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் பிறந்தீர்களா கெடுப்பதற்கு என்று பிறந்தீர்களா? உங்களில் ஒருவன் பனம்பூவை அணிந்த சேரனு மில்லை. கரிய கண்களை உடைய வேப்பமாலை அணிந்த பாண்டியனு மில்லை. இருவருமே அத்திமாலையை அணிந்த சோழர்கள். நீ அணிகின்ற மாலையிலும் அத்திப் பூ! உன்னோடு போரிடுகின்றவன் அணிகின்ற மாலையிலும் அத்திப் பூ! உங்கள் இரண்டு பேரிலும் யாராவது ஒருவர் தோற்றாலும் அந்தத் தோல்வி சோழர் குடிக்கே ஏற்பட்ட தோல்விதான். சோழர்குடி, உங்களைப் பெற்று வளர்த்த பெருங்குடி இல்லையா? அதற்குத் தோல்வி ஏற்படும்படியாக விடலாமா? போர் என்றால் அதைச் செய்கின்ற இருவருமே வெற்றிபெற முடியாது! எவராவது ஒருவர்தான் வெல்ல முடியும் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள இந்தப் பகைமையைக் கேட்டு வேறு அரசர்கள் இகழ்ந்து நகையாடுவார்கள். உங்கள் இருவரையுமே எதிர்த்துச் சோழ நாட்டையே அபகரித்துக் கொள்வதற்குக்கூட முயல்வார்கள். சோழ சகோதரர்களே! என் சொல்லைக் கேளுங்கள்.வேண்டாம் இந்திப் போர் குடிகெடுக்கும் போரை நிறுத்துங்கள். உங்கள் காவிரி காக்கும் களங்கமற்ற குடிப்பெருமையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.”

கோவூர்கிழார் கூறிமுடித்தார். நலங்கிள்ளி முற்றுகையை நிறுத்தினான். நெடுங்கிள்ளியைத் தழுவி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். கோவூர்கிழார் மனமகிழ்ந்து இருவரையும் வாழ்த்தினார்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
நின்னொடு பொருவோன் கண்ணியும்.ஆர்மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்றுநும்செய்தி கொடித்தேர்