பக்கம்:பூமியின் புன்னகை.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உண்ணா விரதம்


• இலங்கைத் தமிழருக் காய் இன்று உண்ணாவிரதம்
கலங்காத் தலைவர் கண்ணியச் சின்னம்
மாற்றார் நடுங்கும் மனத்திடம் உடையார்
அடலேறு அரிமாவளவன் காலை எட்டுமணிமுதல்

மாலை ஐந்து மணி வரை உண்ணாவிரதம்
என்று ஆளுயரச் சுவரொட்டி அடித்தொட்டி
ஏழரை மணிக்கே வீட்டில் ஏ.சி. ரூமில்
மனைவியைத் தவிர யாரும் அறியாமல்

மெதுவடை ஐந்தும் இட்டிலி பத்தும்
ஆம்லெட் இரண்டும் டிகிரி காபியும்
சீராய்உண்டு செரித்த பின்னர்
வாட்டமின்றி விரதம் இருந்து முடித்தார்.

மாலைப் பத்திரிகையில் செய்தி வந்தது
“பச்சை நீரும் பருகாத் தவிப்புடன்
மெச்சும் தலைவர் இருந்தார். பட்டினி
பழரசம் அருந்தி விரதம் முடிந்தது”