பக்கம்:பூமியின் புன்னகை.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பன்மொழிப் புலவர்



பேட்டை ரவுடி பெருமாள் சாமிக்கு
நாட்டு மொழிகளில் தமிழே தகராறு
காலை முதலாய் மாலை வரையும்
இதுதான் உண்மை இதுதான் உண்மை

அந்தி மயங்கும் வேளையில் தினம்தினம்
ஆவாரம் பொட்டல் சாராயக் கடைக்குள்போய்
சாவாசமாகப் பலமில்லிகளை உள்ளே தள்ளிய பின்போ
வேறு நிலைமை வேறுபுலமை எல்லாம் விளங்கும்

இங்கிலீஷ் தமிழ் இந்துஸ்தானி இன்னும்
என்னென்னமோ பாஷைகளில் திட்டும் வசவும்
சில வேளைகளில் 'செட்டுச்செட்டாய்’ அடுக்கிவரும்
போதை தணிந்து பொஸிஷனுக்கு வரும்வரை

மேதை பெருமாள் சாமியும் பன்மொழிப் புலவனே
பல மொழி வித்தகன் பயப்பட வேண்டியவன்
ஏனெனில் பற்பல வேளைகளில் இங்குநான்
பயப்படும் நபர்களில் விதம் விதமாகப் பேசுவோர்