பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பூர்ணசந்திரோதயம்-1 அவரது சொற்களைக் கேட்ட ஷண்முகவடிவு தான் என்ன செய்வது என்று ஒருவித முடிவிற்கு வரமாட்டாதவளாய்ச் சிறிது நேரம் தயங்கி நின்றபின், அவரைநோக்கி, ‘சுவாமிகள் சொன்னது எல்லாம் நியாயமான சங்கதியே; அந்த மாதிரியே நான் நடந்து கொள்ள வேண்டியதுதான் உசிதமாகத் தோன்றுகிறது. நான் என்னுடைய அத்தையம்மாளைத் தனியாக விட்டுவந்து நெடுநேரமாகிறது. அதற்காக அங்கே உடனே போய்ச் சேர வேண்டும் என்ற ஓர் ஆவலும் பதைப்பும் எழுந்து என்னைத் தூண்டிக் கொண்டே இருப்பதால் நான் நேராய்ப் போகவேண்டும் என்று சொல்ல வந்தது. இருந்தாலும் பரவாயில்லை. நான் தங்களுடைய மடத்துக்கு வந்து அங்கே அதிக நேரம் தாமதிக்காமல் உடனே புறப்பட்டுப்போய் விடும்படியான மார்க்கத்தைத் தாங்கள் செய்ய வேண்டும். நான் தங்களுடைய யோசன்ையின்படியே நடந்து கொள்ளுகிறேன். இவ்வளவு தூரம் எனக்கு உதவி செய்து என்னைக் காப்பாற்றிய மகா உபகாரியான தங்களுடைய மனம் கோணும்படியாக நான் பிடிவாதம் செய்வது தகாது. வாருங்கள்மடத்துக்கே போகலாம்' என்று பணிவாகவும் நயமாகவும் கூறினாள். அதைக் கேட்ட பண்டாரம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவராய், 'அம்மா குழந்தாய்! நீ நல்ல விவேகியாகத் தோன்றுகிறாய். உன்னைப் போன்றவர்களுக்குக் கொஞ்சம் கோடி காட்டினால் அதுவே போதுமானது; முட்டாள்களுக்கு அல்லவா இடித்திடித்து இரண்டாயிரம் தரம் சொல்ல வேண்டும். நான் இந்த உலகத்தையெல்லாம்துறந்த பண்டாரம்; பரோபகாரத்தின் பொருட்டே நான் இந்த உடம்பைப் பயன்படுத்தி உழைத்து வருகிறேன்; ஆரூடம் ஜோசியம் முதலிய விஷயங்களெல்லாம் எனக்குக் கொஞ்சம் பரிச்சயம் உண்டு. நீ செட்டியாருடைய பாங்கிக்கு வந்தபோது, நீ யார் என்பதையும், உன்னுடைய கால பலனையும், எrணி தேவதையின் மூலமாக நான் அறிந்து கொண்டேன். உனக்கு நடுப்பாதையில் அபாயம் நேரிடப் போகிறது என்பதை