பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பூவின் சிரிப்பு




பார்த்து மகிழ்ந்துகொண்டே ஆண் குருவி மணலில் மூழ்கி இறகுகளைச் சிலிர்த்து வீசும். பிறகு இரண்டும் சேர்ந்து இந்த மணற்கிரீடையில் உலகத்தையும், எதிரே கடுகடுத்த முகத்தோடு நிற்கும் என்னையும் மறந்து களித்திருக்கும்.

குஞ்சுகளுக்காக அவை அறையமைத்துக்கொண்டிருந்த பகுதியின் பக்கமாகச் சென்றுவிட்டால், இரண்டு குருவிகளும் ஆரவாரம் செய்து என்னை விரட்டப் பார்க்கும். சிட்டுக்குருவி எவ்வளவு பெரிய இரைச்சலை உண்டாக்கும் என்பதை அந்த வேளையில்தான் நன்றாக உணர்ந்தேன். என் சொந்த வீட்டிற்குள்ளே அனுமதி இல்லாமல் நுழைந்துகொண்டு என்னையே விரட்டப் பார்க்கும் குருவிகளிடத்திலே எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. அந்தக் குருவிகள் என் கைக்குள் மட்டும் அகப்பட்டிருந்தால் அவற்றை அப்படியே கசக்கிப் பிழிந்திருப்பேன்.

ஒருவனுடைய தனி உடைமை என்ற எண்ணத்திலே சொல்ல முடியாத ஒரு இன்பம் இருக்கிறது. அப்படிப்பட்ட இன்பத்தைத் துய்க்க ஆவலோடு வந்த என்னுடைய மன அமைதியை இந்தக் குருவிகள் குலைத்து விட்டன. என்னுடைய உற்சாகமும், உள்ளக் கிளர்ச்சியும் மறைந்தன. சோர்வோடு நான் நேற்று மாலை கன்னத்தில் கை வைத்து என் படிப்பறையில் அமர்ந்திருந்தேன். அந்தக் குருவிகளை என்னால் மறக்க முடியவில்லை. அவைகள் இரண்டும் மாலை இளங்காற்றில் ஜிவ்வென்று தாவிப் பறப்பதும், வெண்மணலிலே படுத்து மூழ்கிக் களிப்பதுமாக இருந்தன. பிறகு திடீரென்று என் அறைக்குள்ளே புகுந்து தாமரை முகைபோல அழகாகத் தொங்கிய மின்சார விளக்கின் மேலே அமர்ந்து கொண்டு கொஞ்சத் தொடங்கின. என் உள்ளத்திலே