பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5.சீட்டிலும் நோட்டம்


மனித இனத்திற்கு மகோன்னதமான வழி காட்டியாகவும் மகிழ்ச்சியளிக்கும் தூதுவர்களாகவும், மதியை வளர்க்கும் மகிமை மிகு தாதியர்கள் போலவும் விளையாட்டுகள் உதவி வந்திருக்கின்றன . காலங்காலமாகத் தொடர்ந்தும் வருகின்றன.

விளையாட்டுக்களின் உண்மை நிலையை உயர்ந்த தன்மைகளை உணர்ந்து உரிய முறையில் பின்பற்றி, உளமார விளையாடியவர்கள் எல்லாம் உன்னதமான இன்பம் பெற்றனர். உலக இன்பத்தின் மாட்சியைப் பெற்று மகிழ்ந்தனர். திகழ்ந்தனர்.

வேண்டாம் என்று விதண்டவாதாம் செய்தவர்கள், முரண்டு பிடித்தவர்கள், முட்டாள் தனமாக கட்சிக் கட்டியவர்கள், முரட்டுக்காளையாக மோதியவர்கள் எல்லாம், முழுத் தேங்காயை உருட்டி ஏமாந்த நாய் போல ஏமாந்து ஒழிந்தனர்.

இத்தகைய ஒப்புயர்வற்ற விளையாட்டுக்களை நாம் மூன்று வகையாக இனம் பிரித்துப் பார்க்கலாம்.