புரட்சி ஏட்டில் சமதர்ம முழக்கம்
87
‘யாவும் எனதுடைமை —புவிமிசை யாவும் எனக்குரிமை’ என்று ஜீவா எக்காளமிட்டு, அய்ம்பத்து நான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. நாமோ, வேறு பக்கம், பொய்ம்மான் வேட்டையாடிக் கொண்டே இருக்கின்றோம்.
புரட்சியில், சிங்காரவேலர், செ.தெ.நாயகம், சிதம்பரனார், சித்தக்காடு இராமையா ஆகியோர்களும் எழுதினர்.
ஈ.வெ. ராமசாமி சிறையில் இருக்கையில், பம்பாயில் ஆலைத் தொழிலாளர் எண்பதாயிரம் பேர்கள் வேலை நிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள். பெரியார் வெளியே இருந்தால், எவ்வளவு ஆர்வத்தோடு, தொழிலாளர்களை ஆதரிப்பாரோ, அதே ஆர்வத்தோடு, புரட்சி ஆதரித்தது. முதலாளித்துவத்தைக் கண்டிப்பதிலும் சூடு தணியவில்லை.
‘குருட்டு முதலாளியும், செவிட்டு சர்க்காரும்’ என்ற தலைப்பில் ‘காம்ரேட்’ என்ற பெயரில் ஜீவா எழுதினார். அதில், அவர் அடிக் கோடிட்டுக் காட்டியபடி, முதலாளியும், ஆட்சியும் கை கோத்து நிற்பதையும் தாண்டியே, சமதர்ம உலகத்தைத் தரிசிக்க முடியும். இதை இளைய தலைமுறை உணர்ந்து விழித்து விட்டால்? சாதிக் கொடுமைகளும், வறுமைப் பாறைகளும் திமுதிமு எனச் சரிந்து விழும்.
ஜீவானந்தம் எழுதியது போல, சே. நரசிம்மன், எம்.ஏ. ‘போல்சுவிக் ஆட்சி எல்லாத் தேசங்களிலும், நன்மை பயக்குமா?’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். நாகை தோழர் டி.என். இராமச்சந்திரன் என்பவர், பகுத்தறிவிற்கும், சமதர்மத்திற்கும், உரமூட்டும் ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்த்துக் கொடுத்து உதவினார்.
‘சமதர்ம உலகைக் காண யுவர்காள் வம்மின்’ என்று, கொழும்பு எம்.கே.எம்.காதர் என்பவர் எழுதினார்.
பல சமயத்தவர், பல நிலையினர், அச்சமின்றித் தொடர்ந்து ‘புரட்சி’யில் எழுதி வந்தார்கள்.
அப்போதைய இந்திய சட்ட மன்றத்தில், தோழர் ஜோஷி என்பவர் ‘வேலை இல்லாத கஷ்டத்திலிருந்தும், சம்பளக் குறைவிலிருந்தும், தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு அனுபவ சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.