108
பெரியாரும் சமதர்மமும்
இயக்கத்தின் இம்முடிவு எதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்டது? இயக்கத் தலைவர் பெரியாரின் சொற்களால், அதைத் தெரிந்து கொள்வோம்.
“நான் இரஷ்யாவிற்குப் போவதற்கு முன்பே, பொது உடைமைத் தத்துவத்தைச் சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். இரஷ்யாவில் இருந்து வந்தவுடனும், அதை இன்னும் தீவிரமாகப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். ஆனால், சர்க்கார் பொது உடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து, நமது சுயமரியாதை இயக்கத்தையும் அடக்கி ஒடுக்கி, ஒழித்து விட வேண்டுமென்று கருதியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு, எனக்குப் புத்திசாலித்தனமாகச் சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது.
“இந்த நிலையில், சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு, நான் மட்டும் வீரனாக ஆவதற்கு, ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொள்ளுவதா?
“அஸ்திவாரத்தில் கையை வைத்துச் சாதிகளை ஒழிப்பதற்கு, இன்று இந்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தவிர, வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாக ஞாபகத்தில் வையுங்கள்.
“சமதர்ம வளர்ச்சிக்குப் பிற பக்கங்களிலும் ஆட்கள் கிடைக்கலாம். சாதியொழிப்புக்குத் தன்மான இயக்கம் மட்டுமே போராடுவதால், இவ்வியக்கத்தைக் காப்பாற்றிப் பயன்படச் செய்வது இப்போதைக்கு முன்னுரிமை உடையதாகும்.”
மேற்கூறிய காரணத்தால் பெரியாரும், அவருடைய இயக்கமும், அப்போதைக்குப் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவதில் முனைவதில்லை என்று முடிவு செய்தார்கள்.
பிழைப்பிற்காகப் பொதுப்பணிக்கு வந்தவர்களாக இருந்தால், பொது உடைமைக்கு ஆதரவான எல்லாவற்றையும் அழுத்திக் கொன்றிருப்பார்கள். பெரியாரின் இயக்கமோ, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களையும் கண்டித்துக் கொண்டு திருத்தப் பாடுபடுவதாயிற்றே!
எனவே, பொது உடைமைப் பிரசாரம் சட்ட விரோதம் என்று சொன்னதும், அதைக் கைவிடக் கோரும் அறிக்கையைத் தாங்கி வந்த ‘குடியரசு’ சமதர்மப் பணியை அடியோடு கை நழுவ விடவில்லை.