பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேர்தலில் நிற்காதீர்கள்

137

உலக முழுவதற்கும் கேடாக அமையக் கூடிய இட்லரை முறியடிக்க, அத்தகைய, முன்னாள் எதிரிகளின் கூட்டு தேவைப்பட்டது. வெற்றிக்குப் பிறகு, முதலாளித்துவ நாடுகள், சோவியத் ஆட்சியை ஒழிக்கக் கனவு காண்கின்றன. இது பகற் கனவே.

அதே போல், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய அரசியல் சீர்திருத்தம் பற்றித் தீவிரமாகத் திட்டமிட வேண்டிய நிலையில், தொல்லை கொடுத்த இந்தியக் கட்சிகளோடு, ஆங்கில ஆட்சி உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிற்குப் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு, ஆங்கில ஆட்சி, ஓர் உயர் மட்டக் குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. சர். ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் வந்த குழு, இந்தியாவில், காங்கிரசு போன்ற பல அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசிக் கருத்தறிந்தது. ஆட்சிப் பழக்கமுடைய நீதிக் கட்சியை—போர் நெருக்கடியின் போது, ஆதரவு கொடுத்த நீதிக்கட்சியை—அவர்கள் அழைக்கவில்லை.

‘1940-இலும் 1942-இலும் சென்னை மாகாண ஆளுநரும், இந்திய வைசிராயும் அழைப்பு விடுத்ததைப் பொருட்படுத்தாது, சென்னை மாகாண முதல் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து விட்ட, பெரியார் ஈ. வெ. ராமசாமி, வேறு எவ்வகை தாட்சணியத்திற்கும் கட்டுப்பட மாட்டார். திராவிட நாடு கோரி, அடம் பிடிப்பார். அதற்குச் செவி சாய்த்தால், காங்கிரசுக்காரர்கள் ஒத்துழையாமையை மேற்கொள்ளலாம். பாகிஸ்தான் கோரும் இந்திய முஸ்லீம் லீகை அழைத்துக் கலந்து பேசினால், காங்கிரசுக்காரர்கள் அவ்வளவு முரண்டிக் கொள்ள மாட்டார்கள்.’ இப்படி ஆங்கிலேயர் எண்ணியிருக்கக் கூடும். அப்படி நினைத்திருந்தால், அது தவறல்ல; சரியான மதிப்பீடு என்பதைப் பிற்காலப் போக்குகள் காட்டி விட்டன.

பொதுத் தொண்டுக்கு வந்து விட்டவர்கள், தங்களுக்குத் தனிப்பட ஏற்படும் அவமானங்களைப் பொருட்படுத்தக் கூடாது என்பது குறள் நெறி. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய தந்தை பெரியார், சர். ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்ஸிடம் பேட்டி கேட்டுப் பெற்று, அவரைக் கண்டு, திராவிடநாடு கோரிக்கையை வற்புறுத்தினார். தூதுக் குழுவைப் பொறுத்த மட்டில், அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.