பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டனர்

163

“இவ்வளவும் செய்யத் துணியாத ‘ஆகஸ்ட் துரோகி’ ஆச்சாரியாரை முதலில் மாகாணத்தை விட்டே விரட்டி, இப்போது அடையாற்றில் அக்கடா என்று உட்கார வைத்திருக்கிறார்கள்.

“ஆகவே, வெள்ளைக்காரர் நாச வேலைக்காரர்களைத் தண்டித்தது போல், செய்ய வேண்டுமானால், காங்கிரஸ் மேலிடத்து மந்திரிகள், கம்யூனிஸ்டுகளை மேற்கண்டபடிதான் செய்ய வேண்டும்.

“ஒருக்கால் இப்படியெல்லாம் செய்வார்களென்று கருதித்தான், கம்யூனிஸ்ட் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் இரகசியமாக முன் கூட்டிப் பேசிக் கொண்டு, இந்த நாடகத்தை நடத்துகிறார்களோ என்று கூட, சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

“இல்லாவிட்டால் இந்த மாதிரியாகக் காங்கிரஸ் பத்திரிகையிலேயே ஒருவர் எப்படி எழுத முடியும்?

“இதெல்லாம் அரசியல்! நம்மைப் போன்ற பாமரர்களுக்கு—நாச வேலையால் நஷ்டமும், உயிர்ச் சேதமும் அனுபவிக்கிறவர்களுக்கு இந்த மாதிரி அரசியல் தந்திரமெல்லாம், விளங்கவே விளங்காது.

“சும்மா காட்டுக் கூச்சல் போடாதீர்கள். உங்கள் பிரசங்கமோ, எழுத்தோ, எந்த முட்டாளும் புரிந்து கொள்ள முடியாது.

“எங்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க வேண்டுமானால், நாங்கள் என்னென்ன காரியங்கள் செய்தோமோ, அவைகளை நீங்களும் செய்தால்தான் நல்லது. இல்லாவிட்டால், பொது மக்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள். பொறுப்பில்லாமல், அதிகாரத்தை வீசி எறிந்து விட்டார்கள் என்று சொல்ல மாட்டார்களா?

“நாங்கள் வெள்ளையனிடத்திலிருந்து அதிகாரத்தை வாங்கியது போலவே, நீங்களும் வாங்கிக் கொள்ளுங்களேன்” என்று கூறி, காங்கிரஸ் தலைவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒருக்கால், ஏதாவது இரகசிய ஒப்பந்தம் செய்திருக்கலாமோ.

“இதில் ஏதோ மர்மமிருக்கிறது! தகப்பனுக்கும், பிள்ளைக்கும் நடக்கிற சண்டை மாதிரியே இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களாகிய நாம் சமாதானம் செய்து வைப்பதில் கூட, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அளவுக்கு மீறித் தலையிடக் கூடாது”

தொடர்ந்து காட்டிய பெரியாரின் ஆதரவு பயன் பட்டதா?