196
பெரியாரும் சமதர்மமும்
எப்படிப் பயன்படும்? முப்பது ஆண்டுகளில், எல்லாக் கட்சிகளையும் ஆதரித்துப் பார்த்த பிறகும், தொண்டை வீணாக்கலாமா?
சமதர்மம் என்பது எவருடைய ‘வாணிக முத்திரை’யும் அல்ல; அதற்குப் பாடுபடும் பொறுப்பு, எல்லார்க்கும் உண்டு. தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும், பிறவி இழிவு என்னும் என்புருக்கி நோயும், ஏழை பணக்காரத் தன்மை என்னும் நச்சுக் காய்ச்சலும், சேர்ந்து நம் மக்களை வாட்டுகின்றன. இரண்டிற்குமே ஒரே நேரத்தில், மருத்துவம் பார்க்க வேண்டும். கடும் நோய்க்குப் பத்தியம் போல், சிந்தனை நோய்க்குப் பத்தியம் கடவுள் மறுப்பு. அதுவே மருந்து அல்ல. எனவேதான், தந்தை பெரியார் கடவுள் மறுப்போடு நிற்கவில்லை. அதற்கு மேலும் சென்று, சுயமரியாதை சமதர்மத் திட்டத்தைக் கடைசிக் காலம் வரை பரப்பினார்.
தந்தை பெரியார் மறைவதற்கு 76 நாட்களுக்கு முன்னர், 9-10-1973 நாளைய விடுலை தலையங்கம் கூறுவதைக் கவனித்து நடப்போம்.
‘தனி மனிதச் சொத்துரிமை ஒழிய வேண்டும்; பிறர் உழைப்பில், படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் கவுரமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்,’ என்பது பெரியார் கட்டளை.
பெரியாரைப் பின்பற்றுவோர், கடவுள் மறுப்பாளராக இருப்பது போதாது; சாதிக் கலைப்பாளராகச் செயல் பட வேண்டும். வகுப்புரிமைக்குப் போராடுவதோடு நிறைவு கொள்ளக் கூடாது; சமதர்ம முறையைக் கொண்டு வருவதில் முனைப்பாயிருக்க வேண்டும். அதுவே, எல்லா ஆதிக்கங்களையும், ஆணவங்களையும் தூக்கி எறியும்.
முடிவுற்றது