22
பெரியாரும் சமதர்மமும்
அறுபது ஆண்டுகளாக இக்கருத்து பரவி வருகிறது. இதை எதிர்ப்போர் குறைந்து வருகிறார்கள். இருப்பினும் சாதி முறை சாகவில்லை. இன்னும் உயிரோடு இருக்கிறது எதனால்?
‘கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி!’ என்று பாரதியார் நம்மை இடித்துரைக்கிறார். வழுக்கி ஓடி விடும் இந்த இயல்பே, சாதி வேற்றுமைகளை இன்றும் உயிரோடு வைத்திருக்கிறது. இளைஞர்கள் சூளுரைத்துக் கொள்ள வேண்டும். பிறவி முதலாளித்துவத்தை விரைந்து முறியடிப்பதென்று இளைஞர்கள் சூளுரைத்துக் கொள்வார்களாக!
‘பிறவியினால் ஏற்றத் தாழ்வு ஏற்படும் என்னும் கொள்கையை, இம்மாநாடு மறுப்பதுடன் அக்கொள்கையை வெளியிடும் வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.’
வேத புராணங்கள், சாதிப் புற்றுநோய்க்கு மூலங்கள் ஆகும். மூலங்கள் தொலைந்தால், அதிலிருந்து வளர்ந்த சாதி ஏற்றத் தாழ்வுகள் நிலைக்காது. இதனால்தான், நம் மக்களுடைய நல்வாழ்வுக்கு, சமத்துவ வாழ்வுக்கு, நம் சமய நம்பிக்கை, அதைத் தாங்கி நிற்கும் வேத புராண ஆதிக்கம் தொலைய வேண்டும்.
தீண்டாமை என்னும் கொடுமை, மனித தர்மத்திற்கு விரோதமென்று ஈரோட்டு மாநாடு முடிவு செய்தது. பொதுச் சாலைகள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென்று அம்மாநாடு முடிவு எடுத்தது.
கோடைக் காலத்தில் வாடிக் கிடக்கும் அருகம் புல்லைப் போல, தீண்டாமைக் கொடுமை தமிழகத்தில் தழைக்காமல் வாடி வதங்கிக் கிடப்பதற்குக் காரணம், தன்மான இயக்கத்தின் இடைவிடாத, தீவிரப் பணியாகும்.
வட மாநிலங்களில் இத்தகையச் சமத்துவ இயக்கம் பரவாமையால், மறைந்து விட்ட சம்பூரணானந்த் என்பவரின் சிலையை, அன்றைய இந்திய அமைச்சர் தோழர் ஜகஜீவன்ராம் திறந்து வைத்ததால், அச்சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லி, அதன் மேல் கங்கை நீரை ஊற்றி, தீட்டைத் துடைக்கும் இறுமாப்பைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டோம்.