பகத்சிங்கும் பெரியாரும்
37
ஈ. வெ. ராமசாமி தமக்கே உரிய தனித் துணிவோடு, பகத் சிங்கைப் போற்றினார். அத்துணிவு வெளிப்படை. மற்றோர் நுட்பத்தையும் இத்தலையங்கம் வெளிப்படுத்துகிறது. அது என்ன?
கொள்கைக்கே முதலிடம் என்பதாகும். அது சீரியதாக, உயர்ந்ததாக, தேவையானதாக இருந்து விட்டால், அதற்காக உண்மையாகப் பாடுபடுவோர் கைக்கொண்ட நடைமுறை, குறையென்று தென்பட்டாலும், அதைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடாது, கொள்கைக்காகச் செய்த தியாகத்தைப் பாராட்டும் பெரியாரின் நல்ல இயல்பும், அத்தலையங்கத்தால் விளங்குகிறது.
பகத் சிங், பெரியாரின் கொள்கைக்காரர் அல்லர்; இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர். இருப்பினும், அவருடைய தியாகத்தை, உரிய தாராளத்தோடு போற்றினார். இப்போக்கு பெரியாரோடு உடன் பிறந்தது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், இப்பாடத்தினைப் பெரியாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கொள்கை உடன்பாடு உடையோர் நடைமுறை பற்றிக் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், உரிய போது, உரிய பொது இயக்கங்களுக்கு அத்தகையோரின் துணையையும் சேர்த்துக் கொண்டு, வெற்றி வாகை சூடும் திறத்தைப் பெரியாரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் நல்லது.
இப்போது சமதர்மக் கொள்கையின் பரப்புதலைக் கவனிப்போம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சாதியொழிப்பில் தொடங்கி சமய, கடவுள் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைச் சுட்டுப் பொசுக்கும் காட்டுத் தீயாகப் பரவிற்று. ‘சூத்திரனென்றால் ஆத்திரங் கொண்டடி’ என்னும் முழக்கம் பல இடங்களில் கேட்டது.
சமுதாயத்தின் மேல்மட்டத்திலும், செல்வக் குவியலின் கொடுமுடியிலும் இருந்தோர் அச்சங் கொண்டனர். தங்கள் மேலான நிலைக்குக் கேடு வருமென்று, அவர்கள் அஞ்சினார்கள். இது இயற்கை. அச்சம் உந்த, புராணீகர்களையும், முதிராத நாட்டுப் பற்றாளர்களையும் பிடித்து, தன்மான இயக்கத்தின் மேல் ஏவி விட்டார்கள்.
‘அபசாரம்! அபசாரம்!’ என்று தூற்றுவதாலும் ‘ஆபத்து! ஆன்மீகத்திற்கு ஆபத்து! மறுமைக்கு ஆபத்து! சீலத்துக்கு