பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவகாசமே இல்லாதவர்

ஷாவிடம், “உங்கள் நாடகங்களில், நீங்கள் மிகவும் விரும்புவது எது?” என்று ஒருவர் கேட்டார்.

“என்னுடைய நாடகங்கள் பந்தயக் குதிரைகள் அல்ல. ஒருமுறை அவற்றை எழுதி முடித்துவிட்ட பிறகு, மீண்டும் அவற்றைப்பற்றி நினைப்பதற்கே எனக்கு அவகாசம் இருப்பதில்லை” என்று பதில் அளித்தார் ஷா.

ஒரு வார்த்தை

ஷாவின் ஒரு வார்த்தைக்குப் பதிப்பாளர்கள் 5 ஷில்லிங் வீதம் பணம் தருகிறார்கள். இதை அறிந்த ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி மாணவர்கள் சிலர், ஷாவுக்கு 5 ஷில்லிங் அனுப்பி வைத்து, “ஏதாவது எழுதுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு என்ன எழுதுவது?

ஷா, “வந்தனம்” (Thanks) என்று எழுதி அனுப்பினார். மாணவர்கள் ஏமாந்தனர்.