பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ⚫ போதி மாதவன்

காகவே வந்துள்னேன். என் பிரிவுக்காக நீயும் வருந்தலாகாது. சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் முடிவில் என்றாவது பிரியத்தான் வேண்டும். ஆதலால் விடுதலை வேட்கையோடு வந்துள்ள எனக்காக வருந்துவதை விட்டுப் புலனடக்கமில்லாது போகங்களில் ஆழ்ந்திருப்பவர்களுக்காக வருந்துவதே முறை!

‘இளமையிலேயே நான் துறவுக்கோலத்தை மேற் கொள்ளுவதற்காக அரசர் வருந்த வேண்டாம். என்றுமே மரணம் நம்மை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கையில், நாம் முந்திக்கொள்ளுவதே முறையாகும்.

‘இவைகளையெல்லாம் தந்தையாரிடம் கூறுவதோடு, நீயும் உன் திறமையால் அவருக்கு நய உரைகள் சொல்லி அவர் என்னை மறந்துவிடும்படி செய்ய வேண்டுகிறேன். அன்புக்கு உரியவர் பிரிவதாலேயே துக்கம் வருகிறது. அன்பு அற்றவிடத்திலே துக்கமும் அற்றுப்போகும்.

‘உலகைக் காப்பதற்காகவே நான் உலகைத் துறக்கிறேன். என் இலட்சியத்தில் வெற்றிபெற்றால், என் வழியை உலகம் பின்பற்றும்; உலகமே எனதாகும் என்பதையும் அரசரிடம் கூறு!

‘அவருடைய அன்புக்கு நான் சிறிதும் பாத்திர மில்லை. அவருடைய பெருந்தன்மையின் முன்னால் என் குணங்களின் ஒளி மங்கிவிடும். அவரது பேரன்பிற்கு நான் சிறிதும் உரியவனில்லை என்பதை அறிவுறுத்த வேண்டியது உன் பொறுப்பு!’

இதுவரை அவர் சொல்லியபடியெல்லாம் சந்தகன் செய்து வந்தான் அவர் கொடுத்த நகைகளையும் வாங்கி வைத்துக்கொண்டான். ஆனால் சித்தார்த்தர் ஒரே உறுதியுடன் முடிவாகக் கூறிய சொற்களை அவனால் தாங்க