பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 115

சித்தார்த்தர் ஏதோ ஒரு தத்துவத்தை எண்ணிக் கொண்டு உறுதியாகத் துறவு பூண்டிருப்பதில் அசைவு கொடுக்கும்படி அவர் பல திறப்பட்ட கொள்கைகளையும் கூறிவிட்டு, முடிவாகத் தாம் எடுத்துக் கொண்ட விஷயத்தையும் மெதுவாக உணர்த்த முயன்றார். மனிதனுக்கு மூன்று கடமைகள் உண்டென்றும், தெய்வங்களுக்காக யாகங்கள் செய்தலும், இருடிகளுக்காக வேதங்கள் முதலிய வற்றைப் பாராயணம் செய்தலும், பிதிர்க்களுக்காக வமிச விருத்தி செய்தலுமே அக்கடமைகள் என்றும் கூறினார். தவிரவும் முற்காலத்து மன்னர்கள் சிலர் துறவறம் பூண்ட பின்பு, அதைக் கைவிட்டுத் திரும்பிய கதைகளையும் எடுத்துக் காட்டினார் ‘ஆதலால் தவப் பள்ளியிலிருந்து ஒருவன் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக இல்லத்திற்குத் திரும்புவதில் பாவம் எதுவுமில்லை!’ என்று கூறி அவர் தமது சொற்பொழிவுக்கு முத்தாய்ப்பும் வைத்தார்.

அன்போடும் ஆதரவோடும் அமைச்சர் அறிவுறுத்திய கூற்றுக்களை யெல்லாம் அமைதியாகக் சேட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தர், தமது இலட்சியத்தை அவர் அறியும் படி உள்ளம் திறந்து பேசினார்:

‘உண்மையாக உள்ளது எது என்பதைப்பற்றி நான் பிறருடைய கூற்றுக்களை நம்பியிருக்க முடியாது; தவத்தினாலோ, தியானத்தினாலோ அதைப்பற்றி அறியக் கூடியது அனைத்தையும் நானே அறிந்து கொள்ள வேண்டும். யாரும் அறிந்திராத ஒன்றை நான் ஆராய்ச்சி யில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கில்லை. உளது என்றும், இலது என்றும், ஒன்று என்றும், பல என்றும் முரண்பாடான கருத்துக்களைப் பிறருடைய நம்பிக்கையைக் கொண்டு எந்த அறிஞன் ஏற்றுக் கொள்வான்? மனிதர்கள் அனைவரும் இருளிலே குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போலக் குருட்டாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.