பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 129

‘வையமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டாலும், இன்னும் கடலுக்கு அப்பால் கண்டம் எதுவும் இருக்கிறதா என்று ஆசை கொள்ளல் இயல்பு. ஆசைக்கு ஓர் அளவில்லை ! கடல் முழுவதும் நீர் நிறைந்திருப்பினும், அதற்கு அமைதியில்லை. அதுபோல், எத்தனை எத்தனை இன்பங்கள் இருப்பினும், மனித குலத்திற்குத் தெவிட்டுதல் இல்லை !

‘ஆதலால் இன்பங்கள் என்ற இந்தக் கொடிய பகைவர்களோடு உறவாட எவர்கள் விரும்புவார்கள்? கந்தை அணிந்து, கந்த மூலங்களையே உண்டு, நாகங்களைப் போல நீண்டு தொங்கும் சடை முடிகளோடு விளங்கிய மகரிஷிகள் கூட இவைகளைக் கண்டு மயங்கினார்கள் என்றால், மற்றவர் நிலையைக் கூறுவானேன்! இன்பங்கள் யாவும் நஞ்சுகள். ஆழ்ந்த அறிவுடையோர் இவைகளை அமுதம் என்று விரும்பலாகாது. இன்பங்கள் சீறிப் பாய்கின்ற சர்ப்பங்கள்! இவைகளை அண்டலாகாது.

‘இன்பங்களின் உண்மையான தன்மைகளை உணர்ந்தவர்கள் அவைகளைப் பரிகாரங்களாகவே எண்ணுவார்கள். தாகலிடாய்க்குத் தண்ணீர், பசிப் பிணிக்கு உணவு, வாடைக்கும் வெயிலுக்கும் வீடு, அம்மணத்தை மறைக்க ஆடை–இவ்வாறு ஏற்பட்டுள்ள பரிகாரங்களே நமக்கு இன்பங்களாகத் தோன்றுகின்றன.

‘இன்பங்கள் நிலையற்றவை. முடிவில் இவற்றால் துன்பங்களே வருகின்றன. ஒரு காலத்தில் இன்பங்களாயுள்ளவை, மற்றொரு சமயம் துன்பங்களாக மாறுகின்றன.

‘உலகில் இன்பமும் துன்பமும் இணைந்தே இருக்கின்றன. எந்த நேரமும் புன்னகை புரிந்து கொண்டிருக்கும் அரசனும் இங்கில்லை; எந்த நேரமும் வேதனையில் வாடிக் கொண்டிருக்கும் அடிமையும் இங்கில்லை.