பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 ⚫ போதி மாதவன்

யசோதரை

போதி வேந்தர் அரண்மனைக்கு வந்திருந்த சமயத்தில் அரச குலத்தைச் சேர்ந்த அனைவரும் அவர் இருந்த இடத்திற்கு வந்து அவரைக் கண் குளிரத் தரிசித்துக் கொண்டனர். அவருடைய சிற்றன்னை கௌதமி அவரிடம் உபதேசம் பெற்று, நிருவாண வழியின் முதற்படியை அடைந்தாள். ஆனால் தேவி யசோதரை மட்டும் அங்கு வரவில்லை. அரசர் அவளுக்குத் தனியாகச் சொல்லி விட்டிருந்தும், அவள், ‘என்னிடத்தில் சித்தார்த்தருக்கு ஏதும் சிரத்தையிருந்தால், அவரே என்னை வந்து பார்ப்பார்!’ என்று சொல்லி விட்டாள்.

புத்தரும் யசோதரை எங்கே என்று விசாரித்தார். அவள் வர மறுத்து விட்டாள் என்பதைக் கேட்டு, அவர் எழுந்திருந்து, தாமே அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்றும் புறப்பட்டார். தம்முடன் சாரீபுத்திரரையும், மௌத்கல்யாயனரையும் அழைத்துக் கொண்டார். ‘சோகத்தால் உள்ளம் நொந்துள்ள யசோதரை ததாகதரைத் தொட்டாலும், நீங்கள் பேசாதிருங்கள்!’ என்று அவர் அவர்களுக்குக் கூறிவைத்தார். சுத்தோதனதரும் அவர்களோடு சென்றார்.

யசோதரை கூந்தலை இழந்து, காவிச் சீலை அணிந்து கொண்டு, தனது அறையில் அமர்ந்திருந்தாள். புத்தர் பெருமான் அங்கே சென்றதும், அவள் எழுந்து அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கி அவருடைய இரு பாதங்களையும் பற்றிக்கொண்டு கண்ணீர் பெருக்கிக் கதறினாள். பின்னர் அறையில் மன்னரும் இருப்பதை அறிந்து விரைந்து எழுந்தாள். புத்தர் தமது ஆசனத்தில் அமர்ந்ததும், தேவியும் சிறிது தூரத்திற்கு அப்பால் சென்று அமர்ந்தாள்.