பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332 ⚫ போதி மாதவன்

மௌத்கலி ஏதோ தவறு செய்ததைச் சங்கத்தார் எடுத்துக் காட்டியபோது, அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் அவர்கள் அவரைச் சங்கத்திலிருந்து வெளியேற்றத் தீர்மானம் செய்தனர்.

மௌத்கலி படித்த அறிவாளி; தருமத்தையும், விநய ஒழுக்கங்களையும் நன்கு தெரிந்தவர். அவ்வாறிருந்தும், அவர் சங்கத்தின் தீர்ப்புத் தவறானது என்றும், தாம் தவறே செய்யவில்லை என்றும், சங்கத்தின் தீர்மானம் தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும் மற்றப் பிக்குக்களிடையே பிரசாரம் செய்தார். அவர் கட்சியில் சிலர் சேர்ந்து கொண்டனர். எதிர்க் கட்சியிலிருந்த பிக்குக்களும் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. எனவே இரண்டு சங்கங்களாகப் பிரிந்து அவர்கள் செயலாற்றி வந்தனர்.

இச் செய்திகளெல்லாம் பகவருக்கு அறிவிக்கபபட்டன.

தீர்ப்புக் கூறிய பிக்குக்கள் இருந்த இடத்திற்குப் பகவர் முதலில் சென்று, ‘ஓ பிக்குக்களே! ஒரு விஷயத்தின் உண்மைகள் எப்படியிருப்பினும், “எங்களுக்கு இப்படித் தோன்றுகிறது; நாங்கள் எங்கள் சகோதரர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்போம்!” என்ற முறையில் நீங்கள் நினைக்கவேண்டாம். தருமத்தையும் விநயத்தையும் நன்கு அறிந்து கொண்டு, கல்விமானாயும், ஞானியாயும், அடக்கமுள்ளவராயும், மனச்சான்றை மதிப்பவராயுமுள்ள ஒரு சகோதரருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லாமல், பொறுப்பற்ற முறையில் தீர்ப்பளிக்கும் பிக்குக்கள் சங்கத்தில் பிளவுகள் ஏற்படுவதைக் கண்டு பயமும் நடுக்கமுமே கொள்ளவேண்டும். ஒரு சகோதரர் தாம் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ள மறுப்பதற்காக அவரைச் சங்கத்திலிருந்தே வெளியேற்றத் தீர்மானிப்பது உசிதமில்லை’ என்று கூறினார்.