பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 333

இதேபோல, மௌத்கலியை ஆதரிக்கும் பிக்குக்களிடத்தும் சென்று பெருமான் பின் கண்ட முறையில் நீதியை எடுத்துரைத்தார்: ‘ஓ பிக்குக்களே! நீங்கள் ஏதும் தவறு செய்திருந்தால், “நாம் குற்றமற்றவர்கள்” என்று கருதிக்கொண்டு, அதற்குக் கழுவாய் தேட வேண்டியதில்லை என்று எண்ணியிருக்க வேண்டாம். ஒரு பிக்கு தவறு செய்திருந்து, அவர் அதைத் தவறு என்று கருத வில்லையானாலும், சங்கம் அவரைக் குற்றவாளி என்று கருதுகிறது. அப்போது அவர், “இந்தச் சகோதரர்கள் தரும் விநய ஒழுக்கங்களை நன்கு தெரிந்தவர்கள், கல்வி மான்களாயும், ஞானிகளாயும், அடக்கமுடையவர்களாயும், மனச்சான்றை மதிப்பவர்களாயும் இருக்கிறார்கள்; இவர்கள் என் பொருட்டாகச் சுயநலத்தாலோ, துவேஷத்தாலோ, மயக்கத்தாலோ, பயத்தாலோ முறை தவறி நடக்கமாட்டார்கள்” என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சங்கத்தில் பிளவுகள் ஏற்படுவது பற்றி அவர் பயமும் நடுக்கமுமே கொள்ளவேண்டும்’

இரு கட்சிகளும் பெருமானின் போதனையை மேற்கொள்ளாமல் தனித் தனியாகவே உபவாசதம் முதலிய காரியங்களை நடத்தி வந்தன. அவைகள் இரு சங்கங்களாகக் செயல்புரிந்து வருதல் நியாயம்தான் என்று அண்ணலும் கூறினார்.

ஆயினும், தலைக்கனம் ஏறிய பிக்குக்களுக்கு உபதேசம் செய்தல் எளிய காரியமன்று என்று கருதி, புத்தர் பிரான் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் பாரிலேயகம் என்ற வனத்திற்குச் சென்று அங்கே ஏகாந்தமாக மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து பல இடங்களுக்குச் சென்று, கடைசியாகச் சிராவஸ்தி நகரை அடைந்தார்.