பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 ⚫ போதி மாதவன்

வாழ்வு மரணத்திலும், மரணம் புதுப் பிறவிகளிலும் முடிவடைகின்றன. பிறவி தோறும் உயிர்கள் பொய்ம்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றன. மரணத்திற்குக் காரணம் எது? மனிதன் மரணமற்ற வாழ்க்கையைப் பெறுவது எப்படி? மனிதன் துக்கம் நீங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? இத்தகைய கருத்துக்களை அவர் மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது.

இளவரசர் வெளியே சென்ற பிறகு நிகழ்ந்த செய்திகள் அனைத்தையும் மன்னர் உதாயி மூலம் கேட்டறிந்து உள்ளம் துடித்தார். பேரிடிகள் பல ஒரே சமயத்தில் தம்மைத் தாக்கியது போல வருந்தினார். பெரியதொரு விபத்து தம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதை எண்ணி எண்ணி அவர் இரங்கினார். வைகறை வரையில் அவரும் கண்ணை மூடவேயில்லை.