பக்கம்:மகான் குரு நானக்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

13


கவர்னர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, ஆட்களை அனுப்பி குருநானக்குக்காக தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்டு ஆணையிட்டார்.

வந்தது உணவு அதிலே இருந்து ஒரு ரொட்டித் துண்டை எடுத்து நானக் தனது ஒரு கையிலே வைத்துக் கொண்டார். ஏழை தச்சன் வீட்டின் ஒரு ரொட்டித் துண்டை மறுகையிலே எடுத்துக் கொண்டார்.

இரண்டு கைகளிலும் இருந்த ரொட்டித் துண்டுகளை வந்தவர்கள் கண்ணெதிரே தனித்தனியாகப் பிழிந்து காட்டினார். கவர்னர் வீட்டு ரொட்டித் துண்டிலிருந்து ரத்தம் வடிந்தது. தச்சன் வீட்டு ரொட்டித் துண்டிலிருந்து பால் வடிந்தது. அதைப் பார்த்த அனைவரும் வியந்து போனார்கள்.

அப்போது ஆளுநரைப் பார்த்த குருநானக், இப்போது புரிந்ததா உமக்கு? நான் ஏன் உமது வீட்டு உணவை உண்ண மறுத்தேன் என்பதற்குரிய காரணம். உங்களுடைய உணவில் ஏழை மக்களது ரத்தம் கலந்திருக்கிறது. ஏன் தெரியுமா? ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து, வாட்டி வதக்கி அவர்களது உழைப்பில் நீங்கள் உல்லாசியாக, கவுரவம் தேடுகிறீர்கள். இந்த ஏழை தச்சர் தானே உழைத்து உழைத்து வேர்வை சிந்தி வருமானம் தேடி வாழ்கிறார். அந்த வேர்வைதான் நீங்கள் இப்போது பார்த்த பாலாக ஒடிய காட்சி என்றார். அளுநர் மன வருத்தத்தோடு வந்த வழியே நடந்தார்.

இந்தச் செய்தி சிறிது நேரத்துக்குள் நகர் முழுவதும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தார்கள். எங்கு பார்த்தாலும் குருநானக் வந்தார்கள். அற்புதம் பற்றிய பேச்சே எதிரொலித்தது.