பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அறத்தின் குரல்

தேரோட்டும் சாரதியாக இருக்கச் செய்து விட்டுத் தான் வில்லேந்தித் துரத்திவரும் படையை எதிர்ப்பதற்குத் தயாரானான்.

“சுபத்திரை ! நீ பயப்படாதே! உன் அண்ணனுக்கோ அவனைச் சேர்ந்தவர்களுக்கோ, என் விற்போரால் ஒரு சிறு புண்ணும் ஏற்படாமல் போர் செய்து நான் தடுத்து விடுகிறேன்” - என்று கூறிவிட்டு எதிரிகள் பக்கம் திரும்பவில்லை நாணேற்றுவதற்குத் தொடங்கினான் அர்ச்சுனன். மிகக் குறுகிய நேரப் போரிலேயே பலராமனையும் படைகளையும் தடுத்து நிறுத்திவிட்டு வேறெந்தத் தடையும் இன்றி மேற் சென்றான் அவன். இந்திரப்பிரத்த நகரம் வருகின்ற வரை தேரை சுபத்திரையே சாரத்தியம் செய்தாள். இந்திரப்பிரத்தத்தில் சகோதரர்கள் அர்ச்சுனனையும் சுபத்திரையையும் மணக்கோலத்தில் கண்டு களிப்போடு வரவேற்றனர். அந்தப்புரத்தில் இருந்த திரெளபதி முதலிய மகளிர் சுபத்திரைக்கு மங்கல நீர் கரைத்துப் பாதங்களைக் கழுவி அன்போடு அழைத்துச் சென்றனர். தேர்க்குதிரைகளின் சுடிவாளத்தைப் பிடித்து இழத்துத் திறமையோடு சாரத்தியம் செய்து கொண்டு வந்த அவள் ஆற்றலை வியந்தனர்.

வில்லும் கையுமாகச் சுபத்திரையோடு தேரிலிருந்து இறங்கிய அர்ச்சுனனைக் குறித்து என்ன துன்பம் நேர்ந்ததோ என்று திகைத்தனர் சகோதரர்கள். பின்பு அவனே நடந்த நிகழ்ச்சிகளைக் கூறக் கேட்டு அறிந்து கவலை தவிர்த்தனர். இங்கு இவ்வாறு இருக்கும் நிலையில் கண்ணபிரான் படையெடுத்து வந்திருந்த பலராமனைச் சமாதானப்படுத்தி அவனிடம் உண்மையைக் கூறினார். பலராமனும் ஆர அமரச் சிந்தித்துப் பார்த்தபின் மன அமைதியுற்றுச் சீற்றம் தணிந்தான். அவ்வாறு சீற்றம் தணிந்த அவனையும் அழைத்துக் கொண்டு சுபத்திரைக் குரியனவும் அர்ச்சுனனுக்குரியனவுமாகிய மணப் பரிசில்களுடன் இந்திரப்பிரத்த நகரத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார் கண்ணபிரான். பலராமன் அர்ச்சுனனிடமும்