பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அறத்தின் குரல்


ஆராய்ந்து பார்க்கும் திறன் குன்றியவனான துரியோதனன் இதை உண்மை என்றே நம்பிவிட்டான். உடனே அவன் தன் தம்பீ துச்சாதனனை அழைத்து “தம்பி! இந்தத் தேர்ப்பாகன் பயந்த சுபாவமுள்ளவனாகத் தோன்றுகிறான். ஆகையினால்தான் அவள் இவனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள். இனிமேல் இவன் போக வேண்டாம். நீயே போ. துணிவாக அவளை இங்கே அழைத்து வா. நம்பிக்கையோடு உன்னை அனுப்புகின்றேன். அது குலைந்து போய் எனக்குச் சினம் உண்டாகாதபடி வெற்றியோடு திரும்பிவா” என்றான். தீய செயல்களைச் செய்யும் பொறுப்புத் தனக்குக் கிடைக்கிறது என்றால் அதை விட மகிழ்ச்சி தரக்கூடியது வேறொன்றும் இருக்க முடியாது துச்சாதனனுக்கு அவன் தமையனை வணங்கிவிட்டுச் சென்றான்.

அவன் திரெளபதி இருந்த அந்தப்புரத்தை அடைந்ததும் அவளுக்கு முன்கூசாமற் சென்று தீய சொற்களைக் கூறலானான், “உன்னுடைய கணவன் தருமன் தன் உடைமைகளை எல்லாம் இழந்து விட்டான். இறுதியில் தன் உடன் பிறந்த தம்பியர்களையும் உன்னையும் கூடச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்றுவிட்டான். இப்போது முறைப்படி எங்களுக்கு உரியவளாகி விட்டாய் நீ. உன்னை அரசவைக்கு அழைத்து வரச் சொல்லி என்னை இங்கனுப்பியிருக்கிறான் மன்னனும் என் அண்ணனும் ஆகிய துரியோதனன். மறுக்காமல் வந்துவிடு.” திரெளபதி இதற்கு மறுமொழி கூறாமல் நின்ற இடத்திலேயே குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.

“அன்று இராசசூய வேள்வியின் போது இந்திரப்பிரத்த நகருக்கு வந்திருந்த எங்கள் மன்னன் துரியோதனனைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்தாயே; அது நினைவிருக்கிறதா? அன்று சிரித்து இகழ்ந்த உன் வாயை இன்று அழுது கதறும்படியாகச் செய்கின்றோம் பார்.” திரெளபதி இதையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டாள்.