பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

201

கொண்டு போவது உங்களுக்கும் அவர்களுக்கும் பலவகை இடையூறுகளைக் கொடுக்கும். வனவாசம் மறைவாக நடக்க வேண்டியது முக்கியம். நாம் வெற்றிக்குரிய செயல்களில் ஈடுபடுவதற்கு அமைதியும் தனிமையும் வேண்டும்.”

“நீ கூறியதை நான் எப்போதாவது மறுத்ததுண்டா கண்ணா ? இப்போது நீ கூறியபடி உடனே செய்கின்றேன்” -என்று தருமன் ஒப்புக் கொண்டான். தாய் குந்தியைக் காந்தாரியோடு போய் இருந்து வசிக்குமாறு அனுப்பினார்கள். புதல்வர்களைப் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனோடு வசிப்பதற்கு ஏற்பாடு செய்து அவன் வசத்தில் ஒப்பித்தனர். அனுதாபம் கூறுவதற்காக வந்திருந்த மன்னர்களும் உற்றார் உறவினரும் காமிய வனத்தில் பாண்டவர்களை விட்டு விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐவரும் திரெளபதியும் அந்த அழகிய வனமும் அதன் இயற்கை வளமுமே அங்கே எஞ்சியவர்கள். எல்லோரும் சென்ற பின்னர் தனியே இருந்த பாண்டவர்களின் மனநிலை துயரம், ஏக்கம், தனிமை முதலிய உணர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சகோதரர்களின் நெஞ்சங்களில் தெளிவை உண்டாக்கிக் கவலையைப் போக்குவதற்கென்றே வந்தவர் போல வியாச முனிவர் அப்போது அங்கே வந்தார். பிரம்மாவுக்குச் சமமான அந்த மாமுனிவரை ஏற்றபடி வரவேற்று உபசரித்தனர் பாண்டவர். வியாசர் அவர்களிடம் அத்தினாபுரத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டார். விதி வகுத்த துன்பச் சிக்கல்களுக்காக மனமார வருந்தினார். ஆறுதலும் அனுதாபமும் கூறினார்.

“துயரங்களுக்கெல்லாம் காரணம் மாந்தரது வினைப்பயனே. சூதாடியதால் வாழ்விழந்து அல்லலுற்றது உன் ஒருவனுடைய அனுபவம் மட்டும் அன்று. மன்னாதி மன்னனாகிய நளனும் சூதினாலேயே அரசும், இன்பமும் இழந்தான். இப்போது நீங்கள் வனவாசம் செய்ய நேர்ந்திருப்பதும் அந்த சூது விளைத்த பயன்தான். வனவாசம்