பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

அறத்தின் குரல்


“அடே! அவர்களை விட்டுவிடும். இதோ உனக்குத் தகுந்த ஆள் நான் போரிட வந்திருக்கின்றேன். என்னோடு போருக்கு வா?” சடாசுரன் வீமனுடைய அறைகூவலை ஏற்றுக் கொண்டு அவனுடன் போரிடுவதற்கு முன் வந்தான். ஒரு கையில் கதாயுதமும் மற்றொரு கையில் ஒரு பெரிய மரக்கிளையுமாக வீமன் அசுரனைத் தாக்கினான். அசுரன் ஒரு பெரிய மலைப்பாறையை எடுத்துக் கொண்டு வீமன் மேல் எறிந்து நசுக்க முயன்றான் போர் குரூரமாக நடந்தது. ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு இருவரும் மல்யுத்தம் செய்தார்கள். வீமன் அசுரனின் கைகளை ஒடிக்க முயன்றான். அசுரன் வீமனுடைய மார்பைப் பிளந்தெறிய முயன்றான். ஒருவருக்கொருவர் இளைத்தவர்களாகத் தோன்றவில்லை; இறுதியில் வீமன் அசுரனது உடலை மேலே தூக்கி இரண்டு கைகளாலும் பற்றிக் ‘கர கர‘ வென்று சுற்றி வானில் உயரத் தூக்கி எறிந்தான். கீழே விழுந்து சிதைந்த அசுரனின் உடல் பின்பு எழுந்திருக்கவுமில்லை; மூச்சு விடவுமில்லை. தீமையின் அந்த உரு நிரந்தரமாக அழிந்துவிட்டது.

வீமன் சகோதரர்களையும் திரெளபதியையும் அழைத்துக்கொண்டு வெற்றி முழக்கம் செய்தவாறே தமையன் இருப்பிடம் சென்றான். நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டுத் தருமன் வியந்தான். இதன் பின் சில நாட்களில் பாண்டவர்கள் அந்தக் காட்டிலிருந்து புறப்பட்டுக் கயிலாய மலையின் மற்றோர் பகுதியிலுள்ள பத்ரிநாராயணம் என்ற திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்றார்கள். தெய்வீக இயல்பும் தீர்த்த விசேஷமும் பொருந்திய பத்ரிநாராயணத்தில் சில தினங்கள் தங்கியிருந்த பிறகு, அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த அஷ்டகோண முனிவர் அவர்களை வரவேற்றுத் தம்முடன் இருக்கச் செய்து கொண்டார். ஞானத்தைப் பெருக்கவல்ல நல்லுரைக் கதைகள் பலவற்றை அவர்கள் கேட்கும்படி கூறினார் முனிவர். நீண்ட காலம் பாண்டவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். வனவாசத் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் வரை கழிந்து விட்டிருந்தன.