பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

அறத்தின் குரல்

கொண்டு புறப்பட்டனர். குபேரன் அவர்களுக்குப் பல உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாக வழங்கினான்.

“விரைவில் உங்கள் சகோதரன் அர்ச்சுனன் உங்களோடு வந்து சேருவான். அதன் பின் உங்களுக்கிருந்த தீமைகளெல்லாம் அழிந்து நற்காலம் பிறக்கும். நீங்கள் ஐந்து பேரும் நலமாக வாழ்வீர்கள்” என்று குபேரன் வாழ்த்தினான். அவர்கள் மண்ணுலகை வந்தடைந்தனர். குபேரன் கூறியபடியே சில நாட்களில் அர்ச்சுனனும் வானுலகிலிருந்து அவர்களை வந்தடைந்தான். ஐவரும் ஒன்று கூடினர். கானகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையேயானாலும் எல்லோருமாக ஒன்று கூடி வாழ்கின்ற அந்த வாழ்கையில் தீமைகள் யாவும் அழிந்து நன்மைகள் யாவும் பெருகி விட்டாற் போன்ற ஒருவகை அமைதி நிலைத்திருந்தது.

7. தருமம் காத்தது!

காட்டில் பாண்டவர்கள் நலமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்பதை அறிந்த போது துரியோதனாதியர் உள்ளத்தில் பொறாமை கனன்றது. அவர்களை அப்படி நலமாக வாழவிடாமல் அடிக்கடி ஏதேனும் இடையூறுகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணினர் துரியோதனாதியர். துருவாசர் என்று ஒரு முனிவர் மகாமுன் கோபி. எதற்கெடுத்தாலும் கொடிய சாபங்களைக் கொடுக்கக் கூடியவர். அந்த முனிவரையும் அவரோடு சேர்ந்த வேறு சில முனிவர்களையும், “காட்டில் போய்ப் பாண்டவர்களைச் சந்தியுங்கள்” என்று வழியனுப்பி வைத்தான் துரியோதனன். துருவாசரும் அவனுடைய சகாக்களும் பாண்டவர்களைக் காண்பதற்காகக் காட்டுக்கு வந்து சேர்ந்தனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐந்து பேரும் மிகவும் பயத்தோடு பக்தியும் விநயமும் கொண்டு துருவாசரை வரவேற்று வணங்கினார்கள். துருவாசர் பாண்டவர்களை நலம் விசாரித்து ஆசி கூறினார்.