பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

267


அவர்கள், “அவள் வண்ணமகள், பெயர் விரதசாரிணி, புதிதாகச் சேர்ந்திருக்கிறாள்” -என்று மறுமொழி கூறினர். கீசகனுடைய உள்ளத்தில் ஆசைத் தென்றல் மெல்ல வீசியது. அனுராகத்தின் மெல்லிய குளிர்ச்சி நிறைந்த உணர்வுகள் தலையெடுத்து நின்றன. அவன் அங்கிருந்த மற்றத் தோழிப் பெண்களுக்கு சாடை காட்டினான். அவர்கள் அங்கிருந்து மெல்ல ஒதுங்கிச் சென்றனர். ‘விரதசாரிணி’ அந்தப் பூஞ்சோலையில் தனியாக விடப்பட்டாள், கீசகன் ஆசை துடிக்கும் மனத்தோடு அவளை நெருங்கினான்.

“பெண்ணழகி! உன் எழிலுக்குத்தான் எவ்வளவு ஆற்றல்? விராடராசனின் சேனாதிபதியையே பித்தனாக்கி மயங்கச் செய்து விட்டது இந்த அழகு. என்னை உன் காலில் விழுந்து வணங்கும் படி செய்துவிடும் போலிருக்கிறது இந்தப் பேரழகு. என் நிலைக்கு இரங்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.” உள்ளத்தின் வெறியால் வாயில் வந்த சொற்களைப் பிதற்றிக் கொண்டிருந்த கீசகனை எரித்து நீறாக்கி விடுபவளைப் போலப் பார்த்தாள் விரதசாரிணி. கீசகன் அவளுடைய வெறுப்பு நிறைந்த அந்தப் பார்வையைப் பொருட்படுத்தாமலே மேலும் தலை தாழ்த்திக் காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்சினான்.

“தாங்கள் யாராயிருப்பினும் அது பற்றி எனக்குக் கவலை இல்லை. இம்முறையற்ற செயலை உடனே விட்டு விட்டுச் செல்லுக, என்னையும் என் கற்பையும் தெய்வீக சக்தி வாய்ந்த ஐந்து தேவர்கள் காவல் புரிந்து வருகின்றனர். என்னை நெருங்காதே. உன் உயிரின் மேல் உனக்கு ஆசை இருக்குமானால் இப்படியே போய்விடு” -கோப மிகுதியால் பன்மையில் தொடங்கி ஒருமையில் ஏசி முடித்தாள் விரதசாரிணி. கீசகன் அவளுடைய சினமொழிகளைக் கேட்டும் காமவெறி நீங்காதவனாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தான்.

“என் ஆசையை நீ தணிக்காவிட்டால் எப்படியும் என் உயிர் உடலில் தங்காது. போகிற உயிர் எப்படிப் போனால்