பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/306

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

அறத்தின் குரல்

திறந்து எழுந்து அர்ச்சுனனை நோக்கினான் கண்ணன். தலைப்புறமிருந்த துரியோதனனை அவன் பார்க்கவே இல்லை.

“எங்களுக்கு நீயும் உன்னுடைய படைகளும் துணையாக வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான் அர்ச்சுனன்.

“அதற்கென்ன அர்ச்சுனா! முன்பே உன் அண்ணனிடம் படை உதவுவதாக ஒப்புக் கொண்டு விட்டேனே” என்றான் கண்ணன். தனக்குப் பின்புறம் தலைப்பக்கமாகத் துரியோதனன் உட்கார்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளாதவன் மாதிரி நடித்தான் கண்ணன். இந்தச் சமயத்தில் அர்ச்சுனன் குறிப்பாக, “அண்ணன் கூட இதோ இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே” என்று பின்புறமாகக் கையைச் சுட்டிக் காட்டினான். ஆச்சரியம் நிறைந்த முகபாவத்தோடு அப்போது தான் தெரிந்து கொள்பவனைப் போலத் துரியோதனனைப் பார்த்து “வா! வா! துரியோதனா! எப்போது வந்தாய்? நீ இங்கு வந்து உட்கார்ந்திருப்பது எனக்குத் தெரியவே தெரியாதே!” என்றான் கண்ணன்.

“அர்ச்சுனனுக்கும் முன்பே நான் வந்து விட்டேன். நீங்கள்தான் என்னைக் கவனிக்கவில்லை !”

“ஒரு நாளும் என்னைத் தேடி வராதவன் வந்திருக்கிறாய், என்ன விசேஷமோ?”

“வேறொன்றுமில்லை. தங்களை எங்கள் பக்கம் படை உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்வதற்காகத்தான் வந்தேன்.”

“அடாடா! நான் முன்பே தருமனுக்குப் படை உதவி செய்வதாக வாக்குக் கொடுத்து விட்டேனே! இப்போது கூடச் சற்றுமுன் அர்ச்சுனனிடம் நான் கூறிய உறுதிமொழியைத்தான் நீயும் கேட்டிருப்பாயே! இனி நான் என்ன செய்யலாம்? யாராவது ஒருவருக்குத்தானே உதவமுடியும்?"