பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

349

அரவான் இருக்கும் இடத்தை நாடிச் சென்றான் துரியோதனன். அரவானுக்கு முன்னால் அவனுடைய ஆண்மையை வானளாவப் புகழ்ந்து காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது துரியோதனன் கருத்தாக இருந்தது.

“அரவான்! உன் ஆண்மையும் வீரமும் உறுதி நிறைந்தவை, எதற்கும் அஞ்சாதவை என்று உலகமெல்லாம் புகழ்கிறார்கள். அந்தப் புகழை நிரூபித்துக் காட்டுவதற்குரிய ஒரு சந்தர்ப்பத்தை உனக்கு நான் தருகிறேன். அதை நீ பயன்படுத்திக் கொள்வாயா?” -அரவானைச் சந்தித்ததுமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான் துரியோதனன். துரியோதனனைக் கண்டதும் முதலில் அரவானுக்கு வெறுப்பே ஏற்பட்டது. ஆனாலும் அவன் தன்னைப் புகழ்வது போலக் கேட்ட கேள்வியில் கொஞ்சம் மயங்கி விட்டான் அவன்.

“என்ன செய்ய வேண்டும்? நான் செய்ய முடியாததும் ஒன்று இருக்கிறதா? நீங்கள் சொல்லுங்கள். அவசியம் செய்து முடிக்கிறேன்.” -அரவான் தானாகவே தன் தலையை வஞ்சகத்திற்குள் நுழைத்துக் கொண்டு விட்டான். ‘எங்கே?’ என்று காத்துக் கொண்டிருக்கின்ற துரியோதனனுக்கு இவ்வளவு இடம் கிடைத்தால் போதாதா?

“கட்டாயம் நான் சொல்வதை உன்னால் செய்ய முடியுமா அரவான்?”

“அதென்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? செய்கிறேன் என்றால் செய்தே தீருவேன். இது சத்தியம்! என்னை நீங்கள் முழுமனத்தோடு நம்பலாம்.”

“சத்தியம்தானே? அப்படியானால் போர் தொடங்குவதற்கு முன்னால் உன்னைக் களபலியாகக் கேட்கின்றேன். கொடு!”

தலையில் பேரிடிகள் ஒரு கோடி முறை விழுந்து ஓய்ந்தது போலிருந்தது அரவானுக்கு புகழ் வெறியில் முட்டாள்